பசுக்கொலை

ஜெ..

கடந்த சில வருடங்களாக தாத்ரியில் துவங்கி, இந்த விஷயம் மெல்ல மெல்ல உருவேறி, இன்று திரண்டு நிற்கிறது.

http://indianexpress.com/article/india/life-term-for-killing-cows-cm-vijay-rupani-says-want-vegetarian-gujarat-slaughterhouses-cow-protection-4594523/

Life term for killing cows, Chief Minister Vijay Rupani says want ‘vegetarian’ Gujarat Rupani also described Gujarat as a “unique state”, which followed the …

http://www.ndtv.com/india-news/violence-in-name-of-cow-protection-defames-cause-mohan-bhagwat-1679136

Demanding ban on cow slaughter across the country, RSS chief Mohan Bhagwat today said that any violence in the name of cow protection ‘defames cause’.

http://indianexpress.com/article/explained/how-gau-rakshaks-can-derail-indias-white-revolution-4606852/

Rising cow vigilantism will impact not just the meat trade. These could even hurt the dairy industry.

http://economictimes.indiatimes.com/news/politics-and-nation/why-an-effective-ban-on-cow-slaughter-may-soon-banish-the-cow-itself/articleshow/58103569.cms

இதே ரீதியில் உங்களுக்கு ஓராண்டு முன்பு கடிதம் எழுதியிருந்தேன். நினைவு படுத்துகிறேன். இது நடக்கும் வாய்ப்புகள் இன்று அதிகம் எனத் தோன்றுகிறது. இதனால் பாதிக்கப்படும் மக்களின் வாழ்க்கை, நிகழ் காலத்தில் பலருக்கு மகிழ்வூட்டலாம். அரசு தர்ப்புக்கு எதிராக எதுவும் சொல்லவே கூடாது என்னும் ஒரு தேசிய வாதம் இருக்கும் காலம்.

பேசவே அயர்ச்சியாக இருக்கிறது. சொல்லி வைப்போம்.

வாழ்க

பாலா.

***

.அன்புள்ள பாலா,

நான் ஏற்கனவே இதைப்பற்றிய விரிவான பதிவுகளை எழுதியிருக்கிறேன். அதன்பேரில் என்மேல் ஏராளமான வசைகளும் காழ்ப்புகளும் சமூக ஊடகங்களில் பதிவாகியிருக்கின்றன

இது ஒர் அரசியல் பிரச்சினையாக, ஒரு சமூகப்பிரச்சினையாக இப்போது பார்க்கப்படவில்லை. முழுக்கமுழுக்க மதப்பிரச்சினையாக, உணர்வுசார்ந்ததாக ஆக்கப்பட்டுவிட்டது. இஸ்லாமியநாடுகளில் பன்றியுணவைப்பற்றிப் பேசுவதுபோல. இதைப்பேசுபவர்களும் இஸ்லாமியரிடம் பன்றியுணவைப்பற்றி பேசுவாயா என்றுதான் கொந்தளிக்கிறார்கள்

ஆகவே எந்தத்தரப்புடனும் எதுவும் பேசமுடியாத நிலை இன்றுள்ளது. எதைப்பேசினாலும் வன்மமும் காழ்ப்புமே எழுந்து வருகிறது. இந்த அடிப்படைவாதவெறியுடன் சேர்ந்து நில் இல்லையேல் தேசப்பிரிவினையைப் பேசும், மாற்றுமதவெறியை ஆதரிக்கும் போலிமுற்போக்குகளுடன் சேர்ந்துகொள் என்பதே இன்றைய சூழலின் கெடுபிடி

ஆனாலும் பொதுவாசகர்களுக்காக மீண்டும் சில அடிப்படைகள். இந்து மதத்தின் அமைப்பு சுருதி, ஸ்மிருதி என இருபாற்பட்ட முன்னோர்கூற்றுகளைச் சார்ந்தது. அடிப்படையான தத்துவங்களும், தரிசனங்களும் ஸ்மிருதிகள். அவையே ஆதாரமானவை. நம்பிக்கைகள், ஆசாரங்கள், நெறிகள் ஆகியவை ஸ்மிருதிகள்.

ஸ்மிருதிகள் காலத்திற்கேற்ப மாறுபவை. ஞானிகளால், சமூகச்சூழலால் மாற்றப்படக்கூடியவை. பல ஸ்மிருதிகள் இருந்துள்ளன. இன்று ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள ஸ்மிருதி என்பது அம்பேத்கர் ஸ்மிருதி – இந்து சட்டம்

புலாலுண்ணாமை என்பது இந்துமரபில் ஒரு நெறியாக என்றும் இருந்ததில்லை. அந்தணரும் புலால் உண்டதையே நூல்கள் காட்டுகின்றன. சைவ உணவு என்பது தொல்பழங்காலத்தில் ஆஜீவக, சமணமதங்களில்தான் மையநெறியாக இருந்தது.

ஆனால் இந்துமதத்திற்குள் சைவ உணவும் அகிம்சையும் ஒரு சிறந்த விழுமியமாக முன்வைக்கப்பட்டன. இந்து ஞானிகள் மற்றும் அரசர்களில் சைவ உணவு உண்டவர்களை சிறப்பித்து தனியாக எடுத்துச் சொல்லியிருப்பதைக் காணலாம்

வேதகாலம் முதல் உபநிடதகாலம், மகாபாரத காலம் ஈறாக மாட்டுக்கறி உண்பது இந்துமரபில் பொதுவாக விலக்கப்படவில்லை. பல்வெறு இடைச்செருகல்களினூடாக பிற்காலத்தில் தடைகளும் விலக்குகளும் நூல்களுக்குள் புகுத்தப்பட்டன. பல விஷயங்கள் அகற்றவும்பட்டன. ஆனாலும் மூலநூல்கள் மாடு உண்ணப்பட்டமைக்கு ஏராளமான சான்றுகளை அளிக்கின்றன

கன்று ஈன்ற பசுவைக் கொல்வதைக்குறித்த சில விலக்குகள் சிலநூல்களில் உள்ளன. ஆனால் யாக்ஞவால்கியர் உட்பட அந்தணமுனிவர்களும் மாட்டுக்கறி உண்பதைப்பற்றிய செய்திகள் பல உள்ளன. ஒரு நீண்ட பட்டியலையே போடமுடியும். விவேகானந்தர் உட்பட இந்து ஞானியர் பலர் மாட்டுக்கறி உண்டவர்கள்தான்.

மாட்டுக்கறி உண்பதற்கான விலக்கு இந்தியச் சமூகம் மையப்பெருநிலங்களில் விரிந்து பரவத் தொடங்கியபின் மெல்ல உருவாகி வந்திருக்கலாம். சில பகுதியினரிடமிருந்த விலக்கு பிற அனைவரிடமும் பரவியிருக்கலாம். அதற்கு மக்கள்தொகைப் பெருக்கமும் விளைவாக உருவான பஞ்சங்களும் காரணமாக இருந்திருக்கலாம் என்கிறார் ஆய்வாளரான மார்வின் ஹாரீஸ். பஞ்சங்களின்போது கால்நடைகளைக் கொன்று உண்பதைத் தடுப்பதற்காக உருவான சமூகத்தடையாக இருக்கலாமென்றே நானும் நினைக்கிறேன்

இந்தத்தடை பின்னர் ஸ்மிருதிகளினூடாக மதத்தடையாக உருமாறியது. ஆழமான மதநம்பிக்கையாக வேரூன்றியது. அதற்கு சமண பௌத்த மதங்களின் விரிவாக்கமும் கருத்தியல்ரீதியாக உதவியிருக்கலாம்.

இன்று மதத்தை அரசியலுக்குள் நுழைக்கும் முயற்சியின் ஒருபகுதியாகவே இது கையாளப்படுகிறது. பசுவதைக்கு எதிரான உணர்வெழுச்சி என்பது இந்திய மறுமலர்ச்சியின்போதே எழுந்தது. காந்தியே இவ்வுணர்வெழுச்சியை ஆதரிப்பவராகவும் ஓர் அரசியல் நடவடிக்கையாக முன்வைப்பவராகவும் இருந்தார்.

நான் ஆதர்சங்களாக நினைப்பவர்களில் இருவர் காந்தியும் நாராயணகுருவும். இருவருமே அசைவ உணவை விலக்குபவர்கள், மாட்டிறைச்சி உண்பதை கடிந்தவர்கள். நித்ய சைதன்ய யதியின் நிலைபாடும் அதில் மிக உறுதியானது. ஆனாலும் என்னால் ஏற்றுக்கொள்ளமுடியாத ஒன்றாகவே இது உள்ளது. என்னால் தர்க்கபூர்வமாக இதை ஏற்கமுடியவில்லை. ஏற்கமுடியாதவற்றை ஏற்கமுடியாதென்று சொல்லும் சுதந்திரமே இந்துமதத்தில், என் குருமரபில் நான் காணும் சிறப்பு.

முதல் விஷயம் இத்தனை கன்றுகாலிகள் வளர்க்கப்படும் ஒரு நாட்டில் அந்த ஊனை உண்டே ஆகவேண்டும், ஒருபோதும் மட்கிப்போக விடமுடியாது. இந்தியாவின் மையத்தொழிலாக கன்றுமேய்ப்பு இருந்திருக்கிறது. அன்றும் இன்றும் அந்த கால்நடைகள் எவருக்கோ இறுதியில் உணவாகத்தான் செய்கின்றன. இதை மார்வின் ஹாரீஸ் சுட்டிக்காட்டுவதைக் காணலாம். அதை ஒரு பொருளியல் ஒருபோதும் தவிர்க்கமுடியது. எத்தனை மூர்க்கமாக வாதிட்டாலும் சரி

அப்படியென்றால் மாட்டிறைச்சி உண்பதைப்பற்றிய மூர்க்கமான தடையும் அது குறித்து உருவாக்கப்படும் காழ்ப்புகளும் அதை உண்பவர்களை இழிவுபடுத்துவதில் மட்டுமே சென்று முடியும்.உணவுப்பழக்கம் சார்ந்து மக்களை பிரிப்பதும் இழிவுபடுத்துவதும் சென்றகாலகட்டதின் குரூரமான சாதிக்காழ்ப்புகளை வேறுவகையில் கொண்டுவந்து நிலைநாட்டுவதாகவே ஆகும்.

மாடுகள் வளர்க்கப்பட்டால் அவை உண்ணப்படும், ஐயமே வேண்டியதில்லை. உள்நாட்டில் உண்பதைத் தடைசெய்தால் இறைச்சிக்காக அவை வெளிநாட்டுக்கு விற்கப்படும். என்ன வேறுபாடு? உற்பத்திசெய்யப்பட்ட உணவு முற்றிலும் வீணாவது உலகில் எங்கும் நிகழவாய்ப்பில்லை. இயற்கையில் வேட்டையாடுவதை தடுப்பதற்கும் இதற்கும் பெரும் வேறுபாடுண்டு.

உயிர்க்கொலைபற்றிய பேச்சுக்கு இங்கே இடமில்லை. உலகமெங்கும் மானுடன் உண்ணும் உணவில் பெரும்பகுதி ஊனுணவே. நிலநடுக்கோட்டுப் பகுதிகளில் தாவரப்புரதம் நிறைய கிடைக்கும் இடமான இந்தியாவில் மட்டுமே சைவ உணவு ஒரு கொள்கையாகவேனும் நிலைகொண்டது. மலைகளுக்குச் சென்றபோது பௌத்தமே அசைவத்தை ஏற்றுக்கொண்டது.

விலங்குபுரதம் வழியாகவே பூமிமேல் மானுடம் நிலைகொண்டது. வளர்ந்து இன்றைய வடிவை அடைந்தது என்பது வரலாறு..மானுடப்பண்பாடே ஊனுணவின் கொடை என்றால் அது மிகையல்ல. நாம் வழிபடும் ஞானிகள் கலைஞர்கள் மிகப்பெரும்பாலானவர்கள் ஊனுணவுக்காரர்களே. ஊனுணவு உண்பவர்கள் பாவிகள், கீழோர் என்பவர்கள் மட்கிப்போன மூளையுடன் வாழும் கரிபடிந்த ஆத்மாக்கள்.

உணவுப்பழக்கத்தை, ஒழுக்கநெறிகளைச் சொல்லி பிறரை தாக்குபவர்கள், அவமதிக்கமுனைபவர்கள் பண்பாட்டின் மிகக்கீழ்நிலையில் உள்ளவர்கள். ஒருவகையான தேக்கநிலை மாக்கள். உலகம் அதன் எல்லைகளை களைந்து ஒன்றாகி வரும் காலம் இது. ஒவ்வொருநாளும் நம் பண்பாட்டுடன் வாழ்க்கைமுறையுடன் நம்பிக்கைகளுடன் முற்றிலும் முரண்படும் உலகில் பிறபகுதியைச் சேர்ந்த ஒருவரைச் சந்திக்கும் வாய்ப்புள்ள வாழ்க்கை இந்தத் தலைமுறையில் நமக்கு அமைகிறது. குளிக்கும்பழக்கமே இல்லாத சமூகங்கள் உண்டு, நாம் தழுவி நட்பு பரிமாறியே ஆகவேண்டும். மனத்தடைகளை பண்பாட்டுவிலக்குகளை கடக்காமல் அது இயலாது. அப்படிக் கடப்பவனே உலகக்குடிமகனாக ஆகிறான். அந்தமனவிரிவைத்தான் நாம் நம் தலைமுறைகளுக்குக் கற்பிக்கவேண்டியிருக்கிறது இன்று

பொருளியல்காரணங்களுக்காக, நல்ல மாடுகளைக் காப்பதற்காக, இத்தடை என்றால் அதற்கு அதை மதத்துடன் எவ்வகையிலும் பிணைக்கவேண்டியதில்லை.சட்டபூர்வமான கட்டுப்பாடுகளே போதும். ஈனும்நிலையிலுள்ள பசுக்கள், பால்பசுக்கள், பயன்படும் மாடுகள் கொல்லப்படாதவாறு காத்தாலே போதும்

இந்த மூர்க்கமான தடை , தெருப்பொறுக்கிகளுக்கு அதிகாரத்தை அளிப்பது, மக்களை பிளவுபடுத்தும். இந்தியா என்னும் நவீன ஜனநாயகத் தேசிய அமைப்பை வலுவிழக்கச்செய்யும். அதன் சடலத்தை உண்ண வெளியே வல்லூறுகள் வட்டமிடுகின்றன. உள்ளே பாக்டீரியாக்கள் இப்படி அதை நோயுறச்செய்கின்றன

இது ஒரு அரசியல் உத்தி மட்டுமே. இது வட இந்தியாவில் மக்களைத் திரட்டி வாக்குகளாக ஆக்க உதவுகிறதென்றே தோன்றுகிறது. காங்கிரஸ் கொள்ளும் மௌனம் அதற்குச் சான்று

ஆனால் இந்தியாவெங்கும் இது ஒருபோதும் சாத்தியமாகாது. வடகிழக்கிலோ கேரளத்திலோ தமிழ்நாட்டிலோ. இங்குள்ள உணவுப்பழக்கம் மீதான தாக்குதலை பாரதிய ஜனதாவோ அதன் ஆட்சியோ கொண்டுவர இயலாது. அரசியல்ரீதியாக அம்முயற்சி தோற்கடிக்கப்படும்.

அரசியல்ரீதியாக செல்லுபடி ஆகும் மாநிலங்களில் பசுவதைத்தடை திகழும். செல்லாத இடங்களுக்கு அங்கிருந்து பசு இறைச்சி வந்து சேரும். இது ஓர் அரசியல் உத்தி. அரசியல் ரீதியாக இது தோற்கடிக்கப்படாதவரை நீடிக்கும் என்றே நினைக்கிறேன்.

ஜெ

***

மாட்டிறைச்சி அரசியலும் பண்பாடும்

மாட்டிறைச்சி கள் -முடிவாக

கள்ளுக்கடை காந்தி

கள்ளுக்கடை காந்தி எதிர்வினைகள்

கள்ளுக்கடை காந்தி எதிர்வினைகள் மேலும்

கள்ளுக்கடையும் காந்தியும் கடிதம்

முந்தைய கட்டுரைகாலடி ஓசையிலே
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–81