‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–17

17. நறுமணவேட்டை

ருத்ரனின் குரல் கேட்டு அவன் விடிகாலையில் உடல்வெம்மை படர்ந்த மெல்லிய சேக்கையில் எழுந்தமர்ந்தபோதும் கனவுக்குள்தான் இருந்தான். “அரசே, முதற்பொழுது எழுந்துவிட்டது” என்று ருத்ரன் சொன்னான். காற்றில் சாளரக் கதவொன்று ர்ர் ர்ர் என மரக்குடுமியில் சுழன்றுகொண்டிருந்தது. அறைக்குள் சிற்றகல் கரிபடிந்த இறகுவடிவ பித்தளை மூடிக்கு அடியில் அனலிதழ் குறுகி எரிந்துகொண்டிருந்தது. அவன் மெல்ல தன்னை திரட்டிக்கொண்டான். இடமும் காலமும் தன்னிலையும் துயிலின்போது விலகிநின்று விழிப்பிற்குப்பின் மெல்ல வந்தமைவதை அவன் முன்னரும் கண்டிருக்கிறான். அவை விழிப்பின் மூன்று நிலைகள் மட்டுமே என கற்றிருக்கிறான்.

கானாடலில் அவனுக்கு முதற்படைத்துணை என இடம் நின்று உடன் வருபவன் அணுக்கனாகிய ருத்ரன். குற்றுடலும் இரட்டை மண்டையும் குரங்குக் கண்களும் கொண்ட முண்டன். அவன் சிறுமைந்தனாக இருக்கையிலேயே உடன் வந்த விளையாட்டுத்தோழன். சிறுவனாகவே உடல் எஞ்சிவிட்டதனால் உள்ளத்தையும் அவ்வாறே அமைத்துக்கொண்டவன். அவனுடன் பேசும் அனைவரையும் சிறுவர்களென்றாக்கும் ஊக்கம் கொண்டவன். ஆனால் சொல்கடந்து நுண்புலம் தேரவும் அவனால் இயலுமென புரூரவஸ் அறிந்திருந்தான்.

அவன் எழுந்த அசைவு காதில் விழுந்ததும் ருத்ரன் மஞ்சத்தறையின் கதவைத் திறந்து உள்ளே நுழைந்து அவன் காலருகே நின்று “அரசே, கானகம் சித்தமாகிவிட்டது” என்று அழைத்தான். கனவுக்குள் காட்டிலொரு குரங்கென தாவிக்கொண்டிருந்ததை எண்ணினான். அக்கனவுக்குள் நுழைந்து வந்த ருத்ரன் “நகர்புக பொழுதாகிவிட்டது, அரசே” என்றான். கிளையிலாடியபடி “இன்னொரு நாள்” என்றான் புரூரவஸ். “நகர் காத்திருக்கிறது, அரசே” என்றான் ருத்ரன். “இன்னும் ஒரு நாழிகை” என்றான் கெஞ்சலாக. “இப்போதே நாம் புறப்படவில்லையெனில் கோட்டை மூடுவதற்குள் நகரை அணுக முடியாது.”

“இன்னொரு கணம்” என்றபின் திரும்பி பின்காலை ஒளியில் இலையனைத்தும் மலரென மின்னிய காட்டை பார்த்தான். அவன் கைபற்றி “வருக, அரசே!” என்றான் ருத்ரன். “ஆம்” என்று விழித்துக்கொண்டபோதுதான் அவன் தன் மஞ்சத்தை உணர்ந்தான். எழுந்து ஆடையை சீரமைத்தான். சாளரத்துக்கு அப்பால் விண்மீன் பரவிய வானம் வளைந்திருந்தது. குளிர்காற்றில் இலைப்பசுமை மணத்தது.

ருத்ரனைப் பார்த்து “எங்கு செல்கிறோம்?” என்றான். “காடு ஒருங்கியிருக்கிறது நமக்காக. இது இளவேனில் தொடங்கும் காலம்” என்றான் ருத்ரன். அவன் முகம் மலர்ந்து “இங்கு என் சாளரத்தைக் கடந்து வந்த குளிர் காற்றில் முல்லையின் மணம் இருந்தது” என்றான். அவன் வெளியே நடக்க ருத்ரன் உடன் வந்தான். புரூரவஸ் “கனவில் நான் ஒரு குரங்கென கிளைகள் நடுவே பாய்ந்துகொண்டிருந்தேன், ருத்ரரே” என்றான். “ஆம், நம் குலம் அங்கிருந்து வந்தது” என்றான் ருத்ரன்.

“அறியாத பெருங்காடொன்று. அங்கு மானுட உருக்கொண்ட குரங்கென நானிருந்தேன். என்னைச் சூழ்ந்து மரமானுடர் வால்சுழற்றிப் பாய்ந்தனர். அவர்களுடன் நானும் பாய்ந்தேன். எனினும் அவர்களில் ஒருவனல்ல நான் என்றும் உணர்ந்திருந்தேன்” என்றான் புரூரவஸ். “உங்கள் குரல் அங்கு புகுந்துவந்து அழைத்தது. இங்கு எழுந்து ஆடையை சீர் செய்துகொண்டபின்னரும் நெடுநேரம் அக்கனவில் இருந்தேன்” என்றான். ருத்ரன் “கனவுகள் நன்று. ஒரு பேழைக்குள் பிறிதொரு பேழை என நம்மை அவை பெருகச்செய்கின்றன” என்றான்.

புரூரவஸ் “இக்கனவு தொடர்ந்து என்னுள் இருக்கிறது. கனவு கலைந்து எழுந்து நீரருந்தி படுத்த பிறகும் அக்கனவே தொடர்கிறது. தொடர்பற்ற துண்டு வாழ்க்கைத்தருணங்கள் அவை. பொருள்கொண்டு இணைத்தெடுக்க இயலவில்லை” என்றபின் நினைவு கூர்ந்து நின்று “அதில் நான் பிறிதொருவனாக இருந்தேன்” என்றான். ருத்ரன் அவனருகே வந்து “அரசனாகவா?” என்றான். புரூரவஸ் குழம்பியபின் “அரசனைப்போல. ஆனால் அரசன் அல்ல. ஐந்து உடன்பிறந்தாரில் இரண்டாமவன் என எவரோ சொன்ன நினைவுள்ளது” என்றான்.

“உங்கள் மூதாதையரில் எவரும் அவ்வண்ணம் சொல்லும்படி இல்லையே?” என்றான் முண்டன். “அக்காட்டில் மிக அருகில் எங்கோ ஒரு குடிலில் எனக்கென தேவி ஒருத்தி காத்திருப்பதாக உணர்ந்தேன். கிளைகளூடாக பாய்ந்து செல்கையில் என் உடன்பிறந்தார் இருவர் தொடர அவள் சிறுமலர்த் தோட்டமொன்றில் நின்றிருப்பதை கண்டேன். கருநிறமும் வெண்ணிறமும் கொண்ட இரட்டையர் அவர்கள்.” அவன் பெருமூச்செறிந்து “ஐவருக்கும் அவள் ஒரு துணைவி” என்றான்.

“அது நம் குலவழக்கமே” என்றான் ருத்ரன். “ஆனால் நம் கதைகளில் அரசர்கள் என எவரும் அவ்வண்ணம் இல்லை.” புரூரவஸ் “நானும் அதை பலவாறாக எண்ணி நோக்கியிருக்கிறேன். அவர்கள் முகங்கள் அத்தனை தெளிவாக என்னுள் உள்ளன. அவள் முகம் ஒருநாளும் ஒழியாது உள்ளே எழுகிறது” என்றான். ருத்ரன் குரங்குபோல் கண்சிமிட்டி புன்னகைத்தான். பெரிய சோழிப்பல் நிரைகள் அரையிருளில் மின்னின. “தேவி அழகியா?” என்றான். “கரியவள், கருமையிலேயே பெண்ணழகு முழுமை கொள்ளமுடியுமென்று தோன்றச் செய்பவள்” என்றான் புரூரவஸ்.

“யார் கண்டார்? இன்று அவளை நாம் பார்க்கவும் கூடும்” என்றான் ருத்ரன். எரிச்சலுடன் திரும்பிநோக்கி “நான் விளையாட்டென இதைச் சொல்லவில்லை ருத்ரரே, அவள் முகத்தை தெளிவுறக் கண்டேன். நீண்ட விழிகள். சிற்பமுழுமை கொண்ட மூக்கு. அன்னையின் கனிவும் மழலையின் எழிலும் சூடிய உதடுகள். நிமிர்வும் குழைவும் ஒன்றென்றேயான உடல். ஒரு கணமே அவளைக் கண்டேன் என தோன்றுகிறது. அவளை நோக்கி நோக்கி ஒரு முழு வாழ்நாள் இருந்தேன் என்றும் அப்போது தோன்றியது” என்றான்.

“ஐவரா…?” என்றான் ருத்ரன் தனக்குத்தானே என. “நம் குடிப்பிறந்த எவர் முகமேனும் ஒப்பு உள்ளதா?” என்றான். “ஆம். நானும் உள்ளில் அதையே தேடிக்கொண்டிருக்கிறேன். எல்லா முகங்களிலும் அவர்களின் தோற்றம் உள்ளது என ஒரு முறையும் முன்னர் கண்டதே இல்லை என மறுமுறையும் தோன்றுகிறது” என்று புரூரவஸ் சொன்னான். ருத்ரன் “ஆம், முகங்கள் மீளமீளப் பிறக்கின்றன. உள்ளங்கள் தனித்தன்மைகொண்டு முகத்தை மாற்றி வனைகின்றன” என்றான். “அரசே, ஐவர் முகமும் தெரிந்திருக்கிறதா?”

“ஆம். இருவரையே நான் இன்று பார்த்தேன். பிற இருவரையும் மிக அருகிலென நினைவிலிருந்து எடுக்க முடிகிறது. தவத்தோற்றம் கொண்ட மூத்தவர், விழிக்கூர் கொண்ட இரண்டாமவர். அழகர்களான இரட்டையர். இது முற்பிறவியோ என ஐயுறுகிறேன்” என்றான் புரூரவஸ். ருத்ரன் நகைத்து “பிறவிச்சுழலில் முன் என்ன பின் என்ன? இங்கு முடையப்பட்டிருக்கிறது எவ்வகையில் எது என எவருமறியார்” என்றான்.

வெள்ளி எழுந்தபோது கானாடலுக்கான கல்நகைகளும், தோலாடையும், தோள்பட்டையும் அணிந்து களைப்பறியா கரும்புரவியில் படைத்தோழர் புடைசூழ அவன் நகர் நீங்கினான். கல்லடுக்கி மரம் வேய்ந்து கட்டப்பட்ட சிற்றில்கள் நிரைவகுத்த அவன் நகரின் தெருக்களில் இருபுறமும் எழுந்த குடிகள் அரிமலர் வீசி அவன் குடியையும் கொடியையும் வாழ்த்தி ஒப்பக்குரல் எழுப்பினர். கோட்டை வாயிலை அவன் கடந்தபோது கொடி மாற முரசொலி எழுந்தது. தேர்ச்சாலையைக் கடந்து சிற்றாறுகள் இரண்டைக் கடந்து மறுகரை சென்று காட்டுக்குள் புகுந்தான்.

காடு மெல்லிய குளிராக, தழை மணமாக, ஈரமண் மணமாக, மகரந்தப்பொடி கலந்த காற்றாக அவனை வந்து சூழ்ந்தது. பின்னர் பச்சை இலைகளின் அலைக்கொந்தளிப்புக்குள் நீரில் மீனென மூழ்கி மறைந்தான். அவனில் அணியப்பட்டவையும் புனையப்பட்டவையுமான அனைத்தும் அவிழ்ந்து அகன்றன. அவனுடலில் எழுந்த ஒருவனிலிருந்து பிறிதொருவன் என தோன்றிக்கொண்டே சென்றான். பன்னிரு தலைமுறைகளை உதிர்த்து அக்காட்டில் கல்மழு ஏந்தி, செங்கழுகின் இறகு சூடி, தன் குலத்தலைமை கொண்டுநின்ற ஊருபலன் என்னும் முதுமூதாதையாக ஆனான்.

அவனுக்கு உளமறியும் வால் முளைத்தது. கைகளில் காற்றை அறியும் காணாச்சிறகுகள் எழுந்தன. புரவியிலிருந்து தாவி மரக்கிளைகளில் தொற்றிக்கொண்டான். கிளைகள் வளைந்து வில்லென்றாகி அம்பென அவனை ஏவ பிறிதொரு கிளையைத் தொற்றி கூச்சலிட்டபடி தாவினான். நீரில் விழுந்து அலைதெறிக்க நீந்தி எழுந்து பல்லொளிர கூச்சலிட்டான். கரை மென்சதுப்பில் புரண்டு களிமண் சிலையென எழுந்தான். இளவெயிலில் அச்சேற்றுடன் படுத்து உலர்ந்தெழுந்து மீண்டும் நீர்க்களியாடினான். அன்றும் மறுநாளும் அக்காட்டிலேயே பிறிதொன்றிலாதிருந்தான்.

imagesமூன்றாம்நாள் சாலமரத்தில் கட்டிய ஏறுமாடத்தில் ஈச்சைஓலை பரப்பிய மூங்கில் படுக்கையில் மரவுரி போர்த்தி துயின்றுகொண்டிருந்தபோது மீண்டும் அக்கனவு வந்தது. அதில் அவன் சாலமரத்தின் உச்சியில் கட்டப்பட்ட பெருங்குடிலொன்றின் அடுமனையில் அமர்ந்து தன் முன் குவிந்திருந்த ஊன்சோற்றை அள்ளி உண்டுகொண்டிருந்தான். அவனைச் சூழ்ந்து அமர்ந்திருந்தனர் உடன்பிறந்த நால்வர். பன்றி ஊனை எடுத்து பற்களால் பற்றி இழுத்து கவ்வி உண்டான். அவனுடலில் ஊறிய ஊற்றுக்கள் அனைத்தும் அச்சுவையை முன்னரே அறிந்திருந்தன. சுவை சுவை என பல்லாயிரம் நாவுகள் துடித்தன. உண்ணும்தோறும் பெருகியது உணவு. தன் உடல் இருமடங்கு பெருத்திருப்பதை அவன் கண்டான்.

தான் யார் என ஒரு எண்ணக்கீற்று எழுந்து ஓடுவதை உணர்ந்து ஒருகணம் உண்பதை நிறுத்தினான். “என்ன, மூத்தவரே?” என்றான் கரிய இளையோன். “நான் ஒரு தொல்மூதாதை, எங்கோ அடர்காட்டில் கல்மணிமாலை அணிந்து கழுகிறகு சூடி நின்றிருக்கிறேன் என்று எண்ணிக்கொண்டேன்” என்றான். புன்னகையுடன் “இப்போதே அப்படித்தான் இருக்கிறீர்கள்” என அவன் சொன்னான்.

“உண்ணுங்கள்” என்றபடி அவன் குலமகள் அருகே வந்து மேலும் அன்னத்தை அவன் முன் வைத்தாள். நிமிர்ந்து அவள் முகத்தை பார்த்தான். இருள்செறிந்த தொல்குகைகளில் அறியா முதுமூதாதையர் கல்கொண்டு செதுக்கிய ஓவியச்சிற்பத்தின் வடிவம். இருளைச் செதுக்கி எடுத்த எழில் என்று தொல்கதைகள் கூறும் தோற்றம். நீண்ட இவ்விழிகள் எவரைப் பார்க்கின்றன? இங்கிருந்துண்ணும் இப்பேருடலனையா? இங்கிருந்து நோக்கும் மண்மறைந்த மூதாதையையா?

விழித்துக்கொண்டு குளிரிலா அச்சத்திலா என்றறியாத நடுக்கத்தில் அவன் நெடுநேரம் படுத்திருந்தான். தன்னை வந்தடையும் விழிப்பு காலைத் தன்னிலையை மிகப்பிந்தி கொண்டுவந்து சேர்க்கிறதா? அந்த இடைவெளியில் நின்று தவிக்கும் அகம் எவருடையது? எங்கு உறைகிறது அது? நீள்மூச்சுடன் எழுந்து குடில்முகப்பில் வந்துநின்று ஓசைகளாக இருளுக்குள் சூழ்ந்திருந்த காட்டை நோக்கினான். பின்னர் ஏணி எனக் கட்டிய கொடி வழியாக தொற்றி இறங்கி இன்னமும் இருள்பிரியாத காட்டினூடாக சுள்ளிகள் ஒடியும் ஒலியெழுப்பி நடந்தான்.

இருள் திரண்டெழுவதுபோல் எதிர்கொண்டு வந்தது பிடியானை வழிநடத்திய யானைக் கூட்டமொன்று. பிளிறி அவன் வருவதை தன் குலத்திற்கு அறிவித்தாள் முகக்கை மூதன்னை. கிளையொன்றில் மலைத்தேனீக்கூடுபோல் கிடந்த கரடியொன்று நீளுகிர்கள் ஒன்றுடனொன்று முட்டி கூழாங்கற்கள்போல ஒலிக்க இறங்கி கையூன்றி உடல் ததும்பி புதருக்குள் சென்று மறைந்தது. நீர்மை ஒளி வளைய சென்றன நாகங்கள். விழிமின்னத் திரும்பி நோக்கிய செவி சிலிர்த்த மான்கணங்கள் கடந்து சென்றன.

புலரி வரை அவன் நடந்து சென்றுகொண்டிருந்தான். எங்கு செல்கிறோம் என்று அவன் உள்ளம் அறிந்திருக்கவில்லை. ஆனால் செல்லும்போது அருகணைகிறோம் எனும் அறியா உணர்வொன்று கூர்கொண்டு அவனை வழிநடத்தியது. முதலொளி எழுந்து இலைத்தழைப்பினூடாக ஆயிரம் விழுதுகளாக காட்டில் இறங்கிநின்ற பொழுதில் முற்றிலும் அறியா நிலமொன்றில் அவன் இருந்தான். கைகளை விரித்து வெய்யோனின் வெள்ளிக் காசுகளை ஏந்தி விளையாடியபடி நடந்தான்.

இன்று என் உள்ளம் ஏன் இத்தனை உவகை கொண்டிருக்கிறது என்று எண்ணிக்கொண்டான். உவகைக்கு உவகையே போதுமான ஏதுவாகும் என்று அவன் குலமூத்தார் சொன்னதை எண்ணிக்கொண்டு அதன்பொருட்டும் புன்னகைத்தான். சிறு சுனையொன்றில் மான்கள் நீர் அருந்தும் ஒலி கேட்டது. அவற்றை அப்போதே பார்க்கவேண்டும் என்று எண்ணமெழுந்தது. ஏன் அவ்வாறு தோன்றியதென்று பின்பு பலநூறு முறை அவன் எண்ணியதுண்டு. அவை நீர் அருந்தும் ஒலி விலங்குகள் நீர் அருந்தும் ஒலிபோல விரைவு குறைந்துவரவில்லை. சீரான தாளம்போல் ஒழுகிச்சென்றது என்பதை அவன் உணர்ந்தது பல்லாண்டுகளுக்குப் பின்னர்தான்.

மெல்ல நடந்தபோது அவை மான்களல்ல ஆடுகள் என ஓசை பிரித்தறிந்தான். மான்கள் நீர் அருந்துகையில் அவ்வப்போது தலைதூக்கி இடைவெளி விடுவதுண்டு. ஆடுகளின் மூச்சு மான்கள்போல சீறல்கொண்டதும் அல்ல. அப்பால் மலையூற்று ஊறித்தேங்கிய சிறு சுனையொன்றைச் சூழ்ந்து செறிந்திருந்த மரங்களாலான சோலையை கண்டான். இலைகளுக்கு அப்பால் நீரலை நெளிந்தது. மரங்களின் பசுமையில் நீர் நிறைவு துலங்கியது.

காலையொளியில் சுடர்கொண்டிருந்த இலைத்தழைப்புகளை நோக்கியபடி, மெல்லிய காலடியோசையால் சிறுபசுந்தவளைகளை புல்நுனிகளிலிருந்து தாவித்தெறிக்கச் செய்தபடி, அவன் அச்சோலையை அணுகினான். அவன் வரவை அறிந்த ஆள்காட்டிக்குருவி சிறகடித்து எழுந்து ஓசையிட்டது. புதரில் முட்டையிட்டிருந்த செம்மூக்கன் சிறகொடிந்ததுபோல புல்வெளியில் விழுந்து எம்பிக்குதித்து எழுந்து பறந்து கூவியபடி மீண்டும் விழுந்தது. அவன் அணுகுவதை ஆடுகள் அறிந்துவிட்டிருக்கின்றன எனத் தெரிந்தது. ஆனால் அவன் வேட்டைக்காரனல்ல என்பதை எப்படியோ புல்வாய் விலங்குகள் அறிந்திருந்தன என்பதனால் அவனை அஞ்சி அவை ஓடுவது அரிது.

சோலையை அணுகும்போதே பாரிஜாத மலரின் மணத்தை அவன் உணர்ந்திருந்தான். அணுகுந்தோறும் அந்த மணம் குறைந்து வருவதன் விந்தையை பின்னர்தான் உணர்ந்தான். சோலையின் முகப்பென அமைந்த இரு சாலமரங்களின் அடியில் வந்து நின்றபோது செண்பக மலர்களின் மணமே அவனைச் சூழ்ந்திருந்தது. தான் அறிந்தது செண்பக மணத்தைத்தான், தொலைவில் அதையே பாரிஜாதம் என்று எண்ணிக் கொண்டேன் என்று அவன் எண்ணினான். அது எவ்வண்ணம் என கூடவே வியந்தான். மீண்டும் முகர்ந்தபோது அது மனோரஞ்சிதமா என ஐயம் எழுந்தது. எண்ணிய மணத்தை தான்காட்டும் மலர் என்றால் அது யக்‌ஷரோ கந்தர்வரோ சூடிய மலரா?

சருகுகளில் காலடிகள் ஒலிக்க அவன் உள்ளே சென்றபோது சோலை நடுவே காலை ஒளியை உறிஞ்சிக்கிடந்த சுனைநீரின் அலைவை கண்டான். தாழ்ந்திருந்த மரக்கிளைகளின் அடியில் நீரின் ஒளியலைகள் நெளிந்தன. பின்னர் அவன் தன் இரு ஆட்டுக்குட்டிகளை நீரருந்த காட்டி நின்றிருந்த கரிய கான்மகளை பார்த்தான். ஒரு கணம் உள்ளம் பதறி சொல்லழிந்து முடிவிலியில் பறந்து மீண்டும் திடுக்கிட்டு விழித்து உடல்பொருந்தி எண்ணமென்றாயிற்று. அது உருவெளித்தோற்றம் அல்ல, உளமயக்கும் அல்ல. அணங்கோ என ஐயம் எழுந்து மயிர்சிலிர்த்தான். கால்களை நோக்கி இல்லை எனத் தெளிந்த பின்னரும் நெஞ்சம் துடித்துக்கொண்டிருந்தது.

அவளை அவன் முன்னர் கனவில் கண்டிருந்தான் என்றும் அவன் உடல்கொண்ட மெய்ப்பும் உளம்கொண்ட கொப்பளிப்பும் அதனால்தான் என்றும் பின்னரே சித்தம் உணர்ந்தது. உடன்பிறந்த நால்வருடன் அவன் இருந்த அக்குடிலில் இருந்தவள். அவன் வந்த காலடியோசை கேட்டு முகம் தூக்கி நீண்ட விழிகளால் அவள் நோக்கினாள். முற்றிலும் அச்சமற்ற பார்வை. மடமோ நாணமோ பயிர்ப்போ அறியாது நிமிர்ந்த உடல்.

ஆடுகளும் கீழ்த்தாடையின் தொங்குதாடியில் நீர் சொட்டிவழிய தலைதூக்கி காதுகளை முன்கோட்டி சுண்ணக்கூழாங்கல் என ஒளிவிட்ட கண்களால் அவனை கூர்ந்து நோக்கின. அவற்றின் குறிய வால்கள் துடித்தன. கன்னங்கரிய ஆடு மெல்ல கனைக்க வெண்ணிற ஆடு செருமலோசை எழுப்பியது. பின் அவன் தீங்கற்றவன் என உணர்ந்ததுபோல் மீண்டும் குனிந்து நீரில் தலையை வைத்தது. கரிய ஆடு “ஆம்” என தலையசைத்தபின் தானும் நீரை முகர்ந்தது.

எவர் என்பதுபோல் அவள் புருவங்கள் மெல்ல சுழித்து நெற்றி மடிப்புகொண்டது. வாழைப்பூநிற உதடுகள் மெல்ல விரிந்து உப்புப்பரல் என பல்நிரை தெரிந்தது. அவளை முடிமுதல் அடிவரை கருவறை வீற்றிருக்கும் தேவிமுன் நின்றிருக்கும் அடியவன் என நோக்கினான். ஆயிரம் முறை விழுந்துவணங்கி எழுந்தான் என அத்தருணத்தை பின்னர் அவன் சொற்களாக்கிக்கொண்டான். அரசன் என்றும் ஆண் என்றும் அல்லாமலாகி விழியென்றும் சித்தமென்றும் அங்கு நின்றிருந்தான்.

ஆடுகளை நோக்கி மெல்லிய சீழ்க்கை ஒலி ஒன்றை எழுப்பியபின் அவள் சேற்றில் ஊன்றிய வளைகோலை கையில் எடுத்துக்கொண்டு உலர்ந்து வெடிப்புகள் பரவி தரையோடு வேய்ந்ததுபோல் ஆகியிருந்த கரையில் அவற்றின் பொருக்குகள் உடைந்து ஒலிக்க மேலேறி வந்தாள். நாணல் வகுந்திருந்த வழியினூடாக அவள் காலடிகள் விழுந்து விழுந்து எழுவதை, அவள் அணிந்த மான்தோல் கீழாடை நெளிவதை அவன் பிற ஏதுமில்லாத வெளியில் கணம் கணமென அசைவு அசைவு என கண்டான்.

அவள் அணிந்திருந்த வெண்கல்மாலை உன்னிஎழுந்த இளமுலைகளின்மேல் நழுவிப்புரண்டது. இடையில் அணிந்திருந்த கல்மேகலை நெற்றுபொலிந்த செடிபோல மெல்ல ஒலித்தது. மான்தோலாடை தொடைவரை சுற்றி அதன் நுனியை எடுத்து முலை மறைத்து வலத்தோளில் செலுத்தி சுழற்றிக் கட்டியிருந்தாள். கைகளில் எருதின் கொம்புகீறி நுண்செதுக்குகளுடன் செய்த வளையல்கள். கால்களில் மென்மரத்தால் ஆன சிலம்பு. காதுகளில் ஆடின செம்மணிக் கல்லணிகள். மூச்சில் வியர்த்த மேலுதடுகளுக்கு மேல் புல்லாக்கின் நிழல் அசைந்தது.

அவன் அருகே வந்து “யார்?” என்று அவள் கேட்டபோது திடுக்கிட்டு விழித்துக்கொண்டு நீள்மூச்சுடன் “என் பெயர்…” என்றான். ஒரு கணம் தன் பெயரே தன் நினைவிலெழாத விந்தையை உணர்ந்து தடுமாறி இடறிய குரலில் “நான் அரசன்” என்றான். மீண்டும் சொல்சேர்த்து “நகரத்தவன்” என்றான். அவள் இதழ்கள் விரிய, கொழுவிய கன்னங்களில் மெல்லிய மடிப்புகள் எழ, பற்கள் ஒளியுடன் விரிய புன்னகை செய்து “பெயரில்லாத அரசனா?” என்று கேட்டாள். “ஆம்” என்று சொல்லி உடனே “இல்லை” என்று பதறி பெருமூச்சுவிட்டான். அவள் சிறிய ஒலி எழ சிறுமியைப்போல் வாய்பொத்தி தோள்குறுக்கி சிரித்தாள்.

அவன் தத்தளித்து மூச்சுத்திணறி தன் பெயரை கண்டடைந்தான். “என் பெயர் புரூரவஸ்” என்றான். உடனே சொல்பெருக “புதனுக்கு இளையில் பிறந்த மைந்தன். இங்கு காட்டு அரசனான ஹிரண்யபாகுவின் மைந்தனாகப் பிறந்தேன். உத்தரகுரு நாட்டை ஆள்கிறேன்” என்றான். அவள் விழிகளில் நகைப்பு மின்ன “தன் பெயரை இத்தனை எண்ணிச்சூழ்ந்து உரைக்கும் ஒருவரை முதல்முறையாக பார்க்கிறேன்” என்றாள். “நான் என்னை ஒரு கணம் பிறிதொருவனாக உணர்ந்தேன். பிறிதேதோ பெயர் என் நாவில் எழுந்தது” என்றான்.

புருவம் சுருங்க அவள் “யார்?” என்றாள். “என் கனவில் எழுந்த ஒருவன்… இன்னும் வாழ்ந்திராதவன்” என்றான். “விந்தைதான்” என்று அவள் சொன்னாள். “முதற்கணம் உங்களைப் பார்த்தபோது முன்பு எப்போதோ கனவில் கண்ட ஒருவர் என்றுதான் நானும் எண்ணினேன். அம்மயக்கத்தை இந்தச் சுனைச்சரிவில் ஏறி வருகையில் ஒவ்வொரு காலடியாலும் கலைத்து இங்கு வந்தேன்” என்றாள். அவன் அவள் விழிகளை நோக்கி “உன் பெயர் என்ன, கன்னியே?” என்று கேட்டான். “சியாமை” என்று அவள் சொன்னாள். “நான் இங்கு காட்டை ஆளும் அரசனாகிய கருடபக்‌ஷனின் மகள்.”

“உன்னை முன்னர் இங்கு பார்த்ததே இல்லை. இந்த அடர்காட்டில் என்ன செய்கிறாய்?” என்றான். அவள் “இவை நான் வளர்க்கும் ஆடுகள். இவற்றுடன் இக்காட்டில் உலவுவதே என் விளையாட்டு” என்றாள். “இவற்றை கால்போனபோக்கில் விட்டு நான் தொடர்ந்து செல்வேன். அவற்றை என் உள்ளம் என்பார்கள் என் தோழிகள்.” இரு ஆடுகளும் சற்று அப்பால் சென்று உதிர்ந்த மலர்களையும் பழுத்த இலைகளையும் பொறுக்கித் தின்னத் தொடங்கிவிட்டிருந்தன.

அவன் திரும்பி இரு ஆடுகளையும் பார்த்தான். “இனியவை” என்றான். “கரியது ஸ்ருதன். வெண்ணிறமானது ஸ்மிருதன். இவை இரண்டும் எப்போதும் என்னுடன் இருக்கும். இரவில் என் படுக்கையின் இரு பக்கமும் இவற்றை கட்டி இருப்பேன். விழித்துக்கொண்டதும் முதலில் இவற்றையே பார்ப்பேன். பகல் முழுக்க இவற்றுடனேயே இருப்பேன்” என்றாள். “இரவில் விழித்துக்கொண்டு இவற்றின் கண்கள் ஒளிவிடுவதைக் காணும்போது நான்கு விண்மீன்கள் எனக்கு காவலிருப்பது போலிருக்கும்.”

இருவரும் தங்கள் சொற்களை கைமாறிக்கொண்டனர். விழிகளால் ஒருவரை ஒருவர் தொட்டுக்கொண்டே இருந்தனர். சியாமை புரூரவஸின் தோற்றத்தை அன்றி பிறிதெதையும் அறியவில்லை. அவளிலிருந்து பேருருவம் கொண்டு எழுந்த ஒருத்தி அப்பொன்னிற உடலை ஒவ்வொரு தசையாக நரம்பாக அசைவாக மெய்ப்பாக நோக்கிக்கொண்டிருந்தாள். அப்பெண்ணின் உள்ளங்கையில் அமர்ந்து பிறிதொருத்தி எளிய சொற்களால் சூதுகளம் ஒன்றமைத்து அவனை ஈர்த்தும் அணுகுகையில் விலக்கியும் விலகியபின் மீண்டும் நெருங்கியும் ஆடினாள்.

புரூரவஸ் அவள் விழிகளையன்றி பிறிதெதையும் அறியவில்லை. முலைச்சுவை மறவா சிறுகுழந்தையொன்று அவனுள் இருந்து எழுந்து அவள் மடியில் படுத்து மலர்மென்மை கொண்ட கால்களை நெளித்து, சிறுகட்டை விரல் சுழித்து, காற்றை அள்ளிப்பற்றியது போன்று சிறுகை குவித்து விளையாடியது. பாலாடை படிந்து பார்வை மறைந்த பைதல் பருவமென்பதால் அவள் விழிகளும் இதழ்களின் மணமுமன்றி ஏதும் அவனை சென்றடையவில்லை. அவள் சுவையை எண்ணி இதழூறி வழிய சொல்லிலா குதலைமொழிகளுடன் அவன் அவள் அருகே இருந்தான். அப்போது அவன் அந்த மலர்மணத்தை அறிந்தான். அதுவரை அறியாததாக இருந்தது அது. பிறிதொன்றிலாது வந்து சூழ்ந்துகொண்டது.

முந்தைய கட்டுரைபழம்பொரி
அடுத்த கட்டுரைஇடிதாங்கி