’நானும்’ இயக்கம் கடிதங்கள்

4

 

‘நானும்’ இயக்கம், எல்லைகள்
தருண் தேஜ்பால்களும் பெண்களும்
லீனா மணிமேகலை

அன்பின் ஜெ.

 

எம்.எஸ்.எஸ்.பாண்டியன் பெயரைக் கண்டேன். கஷ்மீர் கதுவா வில் ஒரு முற்போக்கு ஆசாமி பற்றியும் படித்தேன்.

 

என்னிடம், சின்மயியை போற்றும் ஒரு ஜாதி சங்கத் தலைவரின் ஆடியோ தகவலும் வந்தது.

 

இது ஜாதி, மத, கொள்கைகளைத் தாண்டிய குற்றம்.வழிதலும், வழிதல் நிமித்தமும் ஆண்களின் வழி. இதில் பேதங்கள் இல்லை.மாறுவதைத் தவிர நமக்கு வேறு வழியில்லை.

நன்றி

பாலா

 

 

அன்புள்ள ஜெ,

 

வணக்கம். லீனா மணிமேகலை அவர்களுக்கு ஆதரவாக வெளிப்படையாக கருத்து தெரிவித்த குறைந்த எண்ணிக்கை இலக்கியவாதிகளில் ஒருவர் நீங்கள் என்று அறிந்ததில் மகிழ்ச்சி.

 

ஆனால் லீனா ஏன் இந்த நிகழ்வை இவ்வளவு நாள் சுமந்துகொண்டிருக்கிறார்கள் என்று ஆச்சரியப்படுகிறீர்கள். பலருக்கு இந்த விஷயம் புரியவில்லை என்பது உண்மையிலேயே வியப்பாக உள்ளது.

 

பொது இடங்களில் நடக்கும் அத்துமீறல்களைவிட வேலையிடத்தில் தெரிந்தவர்கள்  ஏற்படுத்தும் உளைச்சல் தான் எங்களை அதிகம் கலங்க வைக்கிறது.

 

கதைகளில் ஒரு கதாபாத்திரத்தை பாதி பந்தியில் எழுப்பிவிடும் காட்சி அடிக்கடி வரும். நாஞ்சில் நாடன் கதைகளில்…அந்த சம்பவம் அந்த எழுத்தாளருக்கு எப்போதோ ஒரு முறை நிகழ்ந்திருக்கலாம். ஆனால் அது அவர் ஆழ்மனதில் அவ்வளவு தூரம் இறங்கியிருக்கிறது. ஏன்? கடந்து சென்றிருக்கலாமே?

 

ஏனென்றால் அது எதிர்பாராத நேரத்தில் நடக்கும் பெரிய அவமானம். நாங்களும் படித்து பயிற்சி முடித்து நம்பிக்கையோடு தான் வேலைக்கு வருகிறோம். வேலையிடத்தில் இப்படி நடப்பது பாதி பந்தியில் எழுப்பிவிடப்படுவது போன்ற அவமானம் தான்.

 

அன்புடன்,

நித்யா

 

 

அன்புள்ள ஜெ

 

மிடூ விஷயத்தில் இன்றைக்குக் கேட்கப்படும் எல்லா கேள்விகளுக்கும் பதில்களை நீங்கள் தருண் தேஜ்பால் கட்டுரையில் எழுதியிருந்ததை வாசித்து ஆச்சரியப்பட்டேன். அன்றைக்கே ஏன் சொல்லவில்லை, ஏன் நீதிமன்றம் செல்லவில்லை போன்ற எல்லா கேள்விகளும் அதில் பதில் சொல்லப்பட்டுள்ளன. அப்படிச் சொன்ன ஒரு பெண் எப்படியெல்லாம் அவமானப்படுத்தப்பட்டார் என்பது இன்றைக்கு இப்படிக்கேட்கும் மோரோன்கள் அன்றைக்கும் அதையே கேட்டனர் என்பதும் அக்கட்டுரையில் உள்ளது

 

செல்வி ராஜேந்திரன்

 

அன்புள்ள ஜெ

 

மிடூ இயக்கம் எப்படியெல்லாம் தோல்வியடையும் என்பதற்கான எல்லா தடையங்களும் நம்மூர் பெண்ணியப்புயல்கள் எழுத ஆரம்பித்ததுமே தெரிந்துவிட்டது. தலித்தியத் தீவிரப்புயல்களும் இதையே செய்தார்கள். தங்களை ஒர் அதிதீவிரத் தரப்பாக இவர்கள் காட்டிக்கொள்வார்கள்.தங்கள் சொந்த எதிரிகளையும், தங்கள் குரலை அப்படியே ஏற்றுக்கொள்ளாதவர்களையும் பெண்ணுக்கே எதிரிகள் என்று முத்திரை குத்துவார்கள். ஆதரித்துப்பேசினால் அதில் உள்நோக்கம் கண்டுபிடிப்பார்கள். மௌனமாக இருந்தால் கள்ளமௌனம் என்பார்கள். மொத்தத்தில் இவர்களின் மனநோய்க்கு உண்மையிலேயே உருவாகிவந்துள்ள ஒரு தவிர்க்கமுடியாத இயக்கத்தைப் பலிகொடுத்துவிடுவார்கள்

 

ஆர்.ராஜசேகர்

 

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,

 

சமீபத்தில் முகநூலில் ஒரு எழுத்தாளர் மீது மிடூ குற்றச்சாட்டு, ஒருவர் முகநூலில் உள்பெட்டிக்குச் சென்றபோது செக்ஸுக்கு அழைத்துவிட்டார் என்று சில பெண்கள் சொல்ல உங்கள் வாசகி வெண்பா கீதாயன் அதை வெளிப்படுத்தியிருந்தார். குற்றம்சாட்டப்பட்டவருடைய முகநூல்பக்கம் சென்று பார்த்தேன். சீரான இடைவெளியில் பாலியல்விஷயங்கள். பெரும்பாலும் பெண்களுக்கானவை. பெண்களை தூண்டில்போடுவதற்காக மட்டுமே நடத்தப்படும் முகநூல்பக்கம் அது. உண்மையில் முகநூல் என்பதே மார்க்கால் அதன்பொருட்டு உருவாக்கப்பட்டது. அதைத்தான் அந்தப்பக்கத்தை எழுதுபவர் செய்கிறார்.

 

முகநூலிலும் இணையத்திலும் அறிவார்ந்த விஷயங்கள் கொட்டிக்கிடக்கின்றன. எழுத்தாளர்கள், கவிஞர்கள் எவ்வளவோபேர் இருக்கிறார்கள். அரசியல்பேசுபவர்கள் இருக்கிறார்கள். வெறும் எண்டெர்டெய்ன்மெண்ட் என்று சொல்லப்போனாலும்கூட சினிமா பற்றியெல்லாம் சுவாரசியமாக எழுதுபவர்கள் பலர் உள்ளனர். அதையெல்லாம் விட்டுவிட்டு இந்த இணையதளத்திற்கு  இந்தப்பெண்கள் ஏன் கூட்டம் கூட்டமாகச் செல்கிறார்கள்?  இது மட்டும் அவர்களிடம் சரியாக ஏன் சென்றுசேர்கிறது? இந்தப்பெண்களிடம் தமிழில் எழுதும் ஒரு நான்கு எழுத்தாளர் பெயர்களைக் கேட்டுப்பாருங்கள், தெரியாது. இதுமட்டும் எப்படி நேராக அங்கே கொண்டுசென்றுவிடுகிறது?

 

அந்த முகநூல்பக்கத்தில் நாலைந்து மொக்கை ஸ்டெட்டஸ். அதன்பிறகு உடனே செமிபோர்ன். போர்ன் சைட்டுகள் பற்றிய செய்திகள். பெண்களை ஆதரித்து அவர்களின் துயரம் கண்டு உருகுவதுபோல ஒரு போஸ்ட். உடனே மீண்டும் போர்னோகிராஃபி. வீட்டிலேயே பெண்கள் எப்படி மாஸ்டர்பேட் செய்துகொள்ளலாம் என்று எங்கோ வாசித்ததை எடுத்துப்போட்டு குறிப்பு எழுதுபவனை எழுத்தாளன் என்று நம்பி எழுத்துவல்லமையால் ஈர்க்கப்பட்டு அறிவார்ந்த உரையாடலுக்குப் போனார்களாம். உரையாடினார்களாம். உடனே அவன் கூப்பிட்டுவிட்டானாம். அதெப்படி கூப்பிடப்போச்சு என்று ஒரே லபோதிபோ. மிடூ இயக்கத்தைக் கொச்சைப்படுத்துவது இத்தகைய பெண்கள்தான்.

 

நடுவயதான ஒரு பெண் அத்தனை அப்பாவியாகவா இந்தியாவில் வாழ்ந்துகொண்டிருக்கிறாள்? அவன் கூப்பிடவேண்டும் என்றுதானே அங்கே செல்கிறார்கள். அதன்பின்னர் அவனுடைய ஏதோ இயல்பு பிடிக்கவில்லை. உடனே மிடூவா? இந்தப்பெண்களை மிடூ இயக்கத்தில் சேர்ப்பது வழியாக உண்மையாகவே உழைக்கப்போன இடத்தில் ஆண்தொல்லைகளை அனுபவிக்கும் பெண்களையும் அவமதிக்கிறார்கள். இதை உங்களுக்கு எழுதுவதே வெண்பா கீதாயனின் பக்கத்தில் உங்கள் படம் இருந்ததனால்தான். உடனே என்னை ஆணாதிக்கம் என்று சொல்வார்கள். நான் பெண்தான். என் ஐடியை பார்க்கவும்.

 

கே

 

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-44
அடுத்த கட்டுரைநம்முள் இறப்பவை : நிகோலாய் கோகலின் இறந்த ஆன்மாக்கள்-பாலாஜி பிருதிவிராஜ்