‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 57

tigஇருபுறமும் பெருகிப் பரந்திருந்த படைவெளிக்கு நடுவே மிகத் தொலைவில் வானில் சிறகசையாது நின்றிருக்கும் செம்பருந்துபோல தெரிந்த பொன்னிறக் கொடியில் குரங்கு முத்திரையை ஸ்வேதன் கண்டான். முதற்கணத்தில் அதை எப்படி அடையாளம் காண முடிந்ததென்று அவன் உள்ளம் உடனே வியந்து கொண்டது. அது ஒவ்வொரு கணமுமென தன் சித்தத்தில் இருந்துகொண்டிருந்தது என்றும் உள்ளிருக்கும் அந்த நோக்கே எழுந்து வெளியே அதை அடையாளம் கண்டது என்றும் எண்ணினான். அருகே வந்துகொண்டிருந்த ரோகிணியிடம் “அதுதான்” என்று சுட்டிக்காட்டினான்.

அவள் அந்தக் கொடியை அடையாளம் காணவில்லை. அப்போதுதான் அப்பகுதியெங்கும் அவ்வாறு பலநூறு கொடிகள் பறப்பதை அவன் கண்டான். தன் விழி பிறிதொன்றையும் காணவில்லை என்று எண்ணி புன்னகைத்துக்கொண்டான். ரோகிணி “எதை சுட்டுகிறீர்கள், அரசே?” என்றாள். “உன்னால் கண்டுபிடிக்க முடியாது, குரங்குக்கொடி” என்றான். “ஆம், அவரது கொடி குரங்கு முத்திரை கொண்டது என்று கேட்டிருக்கிறேன்” என்று அவள் சொன்னாள். “மூத்த பாண்டவர் பீமசேனருக்குரியவர்கள் மாருதர்கள். அவர்கள் ஏன் இளைய பாண்டவரின் கொடியில் அமர்ந்தார்கள்?”

ஸ்வேதன் “பல கதைகள். நானறிந்த கதை ஒன்றே. படைக்கலப் பயிற்சியின்போது வாயுதேவன் தனக்கிணையாக பறந்துவந்த அம்பு ஒன்றைக் கண்டு திகைத்து நின்றார். பின்னர் அதை எய்தவனை தேடிச்சென்றார். அங்கு அர்ஜுனர் வில்பயில்வதைக் கண்டு மகிழ்ந்து அவர் யாரென்று கேட்டறிந்தார். அவர் பீமசேனரின் இளையோன் எனக்கேட்டு மகிழ்ந்து வாழ்த்தினார். தன் மைந்தர்களில் ஒருவனாகிய மனோவேகனை அர்ஜுனருக்கு தேராக அளித்தார். அது தேவையாகும்போது பெற்றுக்கொள்வதாக இளைய பாண்டவர் சொன்னார். குருக்ஷேத்ரம் அறிவிக்கப்பட்டதுமே சிற்பிகளை வரவழைத்து மனோவேகன் வந்தமையும் தேர் ஒன்றைச் செய்ய ஆணையிட்டார். இன்று பாரதவர்ஷத்திலேயே விரைவுமிக்க தேர் இது. இதைவிட விரைவாகச் செல்வது வாயுதேவனின் மேலாடை மட்டுமே. இதை பெருந்தேர்வலர் மட்டுமே செலுத்த முடியும்…” என்றான்.

ரோகிணி பரபரப்புடன் வானை துழாவிக்கொண்டிருந்தபின் “பார்த்துவிட்டேன்! அதோ, அந்தக் கொடி!” என்றாள். “ஆம், உனக்கு வில்திறன் உள்ளது… ஒப்புகிறேன்” என்று ஸ்வேதன் புன்னகைத்தான். அவர்கள் அக்கொடியை அணுகுந்தோறும் அங்கிருந்த படைப்பிரிவில் அனைவருமே வில்லவர்களென்று தெரிந்தது. அவர்கள் முற்றிலும் விழியற்றவர்கள்போல் நிலைத்த நோக்குடன் சென்றுகொண்டிருந்தனர். “வில்லவர் விழிகள் ஒன்றையே நோக்குகின்றன. ஆகவே நோக்கற்றவைபோல் சிலைத்தன்மை கொண்டிருக்கின்றன” என்று அவன் ரோகிணியிடம் சொன்னான். “அதைத்தான் நானும் எண்ணிக்கொண்டு வந்தேன். கூர்விழிகள் மானுடத்தன்மையை இழந்துவிடும் ஒரு தருணம் உண்டு” என்றாள் ரோகிணி. “மானுடமென்பதே மாபெரும் அலைக்கழிவு மட்டும்தானா?” ஸ்வேதன் புன்னகைத்தான்.

அவர்கள் முந்தையநாள் இரவு விராடர்களின் படைப்பிரிவின் குடிலில் தங்கி காலையில் கிளம்பியிருந்தனர். பகலெல்லாம் பயணம் செய்து அர்ஜுனனின் படைப்பிரிவை வந்தடைந்திருந்தார்கள். படைத்தொடக்கத்தில் இந்திரனின் மின்படை பொறிக்கப்பட்ட பெரிய பட்டம் ஒன்று மூங்கில் தூணில் கட்டி தொங்கவிடப்பட்டிருந்தது. தொலைவிலிருந்து பார்க்கையில் முகபடாம் அணிந்த யானை காது அசைத்து மெல்ல திரும்புவதுபோல் தோன்றியது. அதனருகே இருந்த காவல்மாடமும் அந்தப் பட்டத்தூணும் அருகிருந்த சிற்றில்லும் சீர்நடையில் சென்றுகொண்டிருந்த படைகளுடன் சகடங்களில் ஒழுகிக்கொண்டிருந்தன. அங்கிருந்த ஒவ்வொன்றும் அடியிலொரு நதிப்பெருக்கால் கொண்டுசெல்லப்படுபவைபோல் சென்றன.

காவல்மாடத்தை அணுகியதும் அங்கு நின்றிருந்த காவலன் அவர்களை நோக்கி தலைவணங்கி “தங்கள் ஆணையோலை…?” என்றான். ஸ்வேதனுடன் வந்த திருஷ்டத்யும்னனின் துணைப்படைத்தலைவன் வஜ்ரகுண்டலன் முன்னால் சென்று ஆணையோலையை காட்டினான். காவலன் தலைவணங்கி “இளவரசர் தன் குடிலில் இப்போது இல்லை. எங்கு சென்றிருக்கிறாரென்று தெரியாது. தாங்கள் காத்திருக்கலாம். அவர் வரும்பொழுதை எவராலும் உரைக்க இயலாது. ஓய்வெடுப்பதென்றால் பாடிவீடுகளை ஒருக்கச் சொல்கிறேன்” என்றான். “வேண்டியதில்லை, காத்திருக்கிறோம்” என்று ஸ்வேதன் சொன்னான். ரோகிணியிடம் “இருபதாண்டுகளாக காத்திருக்கிறேன்” என்றான். அவள் புன்னகை புரிந்தாள். அவர்களை ஒரு வீரன் அழைத்துச்சென்றான். அந்த இடத்தை அடைந்ததுமே அதுவரை இருந்த உளக்கிளர்ச்சி அமைந்து ஆழ்ந்த நிறைவொன்றை ஸ்வேதன் அடைந்தான். “இனி அவரை பார்க்கவில்லை என்றாலும் தாழ்வில்லை. இங்கு கால்வைத்ததே நிறைவு” என்றான்.

அந்தப் பாடிவீடு எட்டு சகடங்களின் மேல் அமைக்கப்பட்டு எட்டு காளைகளால் இழுக்கப்பட்டு படையுடன் தானும் சென்று கொண்டிருந்தது. அதற்கப்பால் எழுந்து நின்ற குரங்குக்கொடி பறக்கும் கொடிக்கம்பமும் சகடங்கள் அமைந்த பீடத்தில் காளைகளால் இழுக்கப்பட்டு சென்றபடியே இருந்தது. அவர்கள் நடக்க நடக்க மிகக் குறைவாகவே இடைவெளி சுருங்கியது. ஸ்வேதனும் வஜ்ரகுண்டலனும் புரவிகளை காவலனிடம் ஒப்படைத்துவிட்டு இறங்கி மையக்குடிலுக்கு சென்றார்கள். அங்கு நின்றிருந்த காவலன் அவன் அளித்த கணையாழியையும் ஓலையையும் சீர்நோக்கி உள்ளே செல்லும்படி பணித்தான். சென்று கொண்டிருந்த பாடிவீட்டில் படிகளில் கால் வைத்தேறி உள்ளே சென்று அதன் சிறிய முகப்பில் போடப்பட்டிருந்த மூங்கில் பீடத்தில் அவன் அமர்ந்தான். வஜ்ரகுண்டலன் அருகே நிற்க விளிம்பில் ரோகிணி நின்றாள்.

உள்ளிருந்து வெளியே வந்த இளைஞனைப் பார்த்ததுமே ஸ்வேதன் அடையாளம் கண்டுகொண்டான். அவன் பார்த்த ஓவியங்களில் எழுதப்பட்டிருந்த அர்ஜுனனின் இளைய உருவம் போலவே இருந்தான். எழுந்து கைகூப்பி “பாண்டவ மைந்தர் சுருதகீர்த்தியை வணங்குகிறேன். நான் குலாட குலத்து இளவரசன் ஸ்வேதன். இளைய பாண்டவரை அடிபணிய வந்தேன்” என்றபின் திரும்பி தன் அருகே நின்ற திருஷ்டத்யும்னனின் துணைப்படைத்தலைவனை பார்த்தான். அவன் ஓலைகளையும் கணையாழியையும் நீட்ட சுருதகீர்த்தி முறைப்படி தலைவணங்கி அதை பெற்றுக்கொண்டான். “அமருங்கள், குலாடரே. தங்கள் வரவு நிறைவளிக்கிறது. இச்சந்திப்பால் நன்மை திகழ்க!” என்றான். பின்னர் ஓலையைப் படித்து கணையாழியை ஒருமுறை நோக்கியபின் அதை மட்டும் திரும்ப படைத்தலைவனிடம் கொடுத்தான்.

ஓலையை உள்ளே கொண்டுசென்று வைத்துவிட்டு திரும்பி வந்து “தந்தை இங்கில்லை. புலரியிலேயே படைகளின் அணிவகுப்பை பார்க்கச் சென்றார். அங்கிருந்து காட்டுக்குள் சென்றிருக்கக்கூடும்” என்றான். “தனியாகவா?’ என்று ஸ்வேதன் கேட்டான். சுருதகீர்த்தி புன்னகைத்து “அவர் திரும்பிவரும் பொழுதை எவரும் சொல்லிவிடமுடியாது. பெரும்பாலும் பின்காலையில் வருவார்” என்றான். ஸ்வேதன் “நான் அவருடன் படைத்துணையாக நின்றிருக்க விழைந்து வந்துள்ளேன். எனது படைகள் அங்கு திருஷ்டத்யும்னரின் படைகளுடன் நின்றுள்ளன” என்றான். “ஆம், பாஞ்சாலர் தன் ஓலையில் கூறியிருந்தார்” என்று சுருதகீர்த்தி சொன்னான். வஜ்ரகுண்டலன் வணங்கி விடைபெற்று திரும்பிச் சென்றான்.

மேலும் சொல்லெடுக்க ஏதுமின்றி இருவரும் அமைதியானார்கள். சுருதகீர்த்தி “தாங்கள் இங்கு காத்திருப்பதென்றால் நன்று. எனக்கு சில அலுவல்கள் உள்ளன. இன்னும் சற்று நேரத்தில் வந்துவிடுவேன்” என்றபின் பாடிவீட்டிலிருந்து இறங்கி தொடர்ந்து வந்துகொண்டிருந்த தன் படைவீரர்களை நோக்கி குதிரைக்காக கையசைத்தான். அவன் இறங்கியபோதுதான் அந்தப் பாடிவீடு நகர்ந்து சென்றுகொண்டிருக்கும் செய்தி மீண்டும் ஸ்வேதனின் உள்ளத்தை அறைந்தது. அருகே இருக்கும் அனைத்து சிறுபாடிவீடுகளும் நகர்ந்து வந்துகொண்டிருந்ததனால் நிலையான இடமொன்றென விழிகள் சமைத்துக்கொண்டிருந்தன. அவ்வப்போது மரங்கள் வரும்போது மட்டும்தான் ஒழுக்கு உணரப்பட்டது.

ஸ்வேதன் திரும்பி ரோகிணியிடம் “உன்னைக் குறித்து அவர் ஏதேனும் கேட்டிருந்தால் சொல்லலாம் என்று எண்ணினேன்” என்றான். “தாழ்வில்லை. எங்களை அரசகுடியினர் விழிகொண்டு நோக்குவது இல்லை. பெரும்பாலானவர்களுக்கு நாங்கள் கண்களில் படுவதே இல்லை” என்றாள் ரோகிணி. அவள் அதை புன்னகையுடன் சொன்னாலும் ஸ்வேதன் “அவர் இளைய பாண்டவரின் மைந்தர். சிற்றியல்புகள் எதுவும் அவரிடம் இருக்க வாய்ப்பில்லை” என்றான். “அவர் உங்களை ஓரவிழியால் பார்த்தார். நெடுநேரமல்ல, ஒருகணம்தான். அப்போது அவர் விழியை நான் பார்த்தேன். அதில் ஒவ்வாமை இருந்தது” என்று ரோகிணி சொன்னாள். “ஏன்?” என்று ஸ்வேதன் கேட்டான். ரோகிணி புன்னகைத்து “ஒருவேளை தாங்கள் அவர் மைந்தனோ என்று ஐயுறுகிறார் போலும். தன் தந்தைக்கு செல்லுமிடமெல்லாம் மைந்தர் என்பதை கேட்டுதானே அவரும் வளர்ந்திருப்பார்?” என்றாள்.

ஸ்வேதன் உரக்க நகைத்து “ஆனால் என்னிடம் இளைய பாண்டவரின் எந்த உருவ ஒப்பும் இல்லையே?” என்றான். ரோகிணி “உருவ ஒப்புமை என்பது குருதியினூடாக வந்து தசைகளில் திகழவேண்டுமென்பதில்லை. உள்ளத்தூடாக வந்தும் உடலசைவில் எழமுடியும். நான் முதலில் உங்களைப் பார்த்ததும் இளைய பாண்டவர் என்றே எண்ணினேன். சில கணங்களுக்குப் பின்னரே நீங்கள் பிறிதொருவர் என்று விழி தெளிந்தது” என்றாள். “நீ இளைய பாண்டவரை முன்னரே பார்த்திருக்கிறாயா?” என்றான். “இல்லை. ஆனால் சொற்களினூடாக பல்லாயிரம் முறை அவரை என் உள விழிக்குள் நிகழ்த்தியிருக்கிறேன்” என்றாள். “அது எப்படி அவரது தோற்றமாகும்? சொல் அத்தனை தெளிவாக ஒருவரை விழிமுன் நிறுத்துமா என்ன?” என்றான். “என் உள்ளம் சொற்களை உணர்வது. அவரை நிகிழ்த்தும் களமென அது முன்னரே ஒருங்கியிருந்தது. அவர் நடந்துசென்ற காலடித்தடத்தையேகூட அடையாளம் காண இயலும் என்னால்” என்றாள் ரோகிணி.

அப்பால் புரவியொன்று வந்து நிற்க அதிலிருந்து இறங்கிய இளைஞனும் துணைப்படைத்தலைவனும் அவனை நோக்கி வந்தனர். ரோகிணி “அது அவர் மைந்தர்!” என்றாள். “என்ன சொல்கிறாய்?” என்று ஸ்வேதன் கேட்டான். “ஐயமே இல்லை, அது அவர் மைந்தர்! எங்கிருந்து வருகிறார் என்று கேளுங்கள்” என்றாள். ஸ்வேதன் எழுந்து வணங்கி “உள்ளே வருக, இளவரசே!” என்றான். வந்தவன் அர்ஜுனனின் அதே முகமும் உடலும் கொண்டிருப்பதை ஸ்வேதன் அப்போதுதான் உணர்ந்தான். அதுவரை விழியை தடுத்திருந்தது ஓர் ஒவ்வாமை. அவனால் சுருதகீர்த்தியின் ஒவ்வாமையை புரிந்துகொள்ள முடிந்தது.

அவ்விளைஞன் சுருதகீர்த்தியின் இளைய வடிவம் போலிருந்தான். சென்றுகொண்டிருந்த பாடிவீட்டிற்கு இணையாக நடந்தபடி அவன் “நான் பாண்டவர்களில் இளையவராகிய அர்ஜுனரை பார்க்கும்பொருட்டு வந்தேன். நாகர்குடியை சார்ந்தவன். என் பெயர் அரவான்” என்றான். ஸ்வேதன் “தங்களைப்பற்றி கதைகளை கேள்விப்பட்டிருக்கிறேன். தங்கள் தாயை இளைய பாண்டவர் மணந்த கதை சூதர் நாவில் திகழ்கிறது. இது அவருடைய பாடிவீடு. நானும் அவரை பார்க்கும்பொருட்டே வந்துள்ளேன். உள்ளே வருக, இளவரசே!” என்றான்.

அரவான் காலெடுத்து உள்ளேவைத்து மேலே வந்தான். ரோகிணியைப் பார்த்து தலைவணங்கி “வணங்குகிறேன்” என்றான். அவள் திகைத்து “ஆம், வணங்குகிறேன்” என்றாள். ஸ்வேதன் திரும்பிப்பார்த்து “இவள் பெயர் ரோகிணி. அடுமனையாட்டி. இளைய பாண்டவரை பார்க்கும் பொருட்டு என்னுடன் வந்தாள்” என்றான். அரவானின் விழிகளில் அவள் பெண்ணல்ல என்பது எந்த மாற்றத்தையும் உருவாக்கவில்லை என்பதை கண்டான். சிறு படபடப்புடன் அவனுடன் வந்த படைத்தலைவன் “எங்கள் தலைவர் என்னிடம் இவருடன் இங்கு வந்து ஓலை ஒன்றை கையளிக்கும்படி கூறினார்” என்றான். “நான் இப்பாடிவீட்டுக்கு பொறுப்பானவன் அல்ல. பாண்டவ மைந்தராகிய சுருதகீர்த்தியே இதை நடத்துகிறார். இன்னும் சிறுபொழுதில் அவர் இங்கு வருவார். ஓலையை அவரிடம் அளிக்கலாம்” என்றான் ஸ்வேதன்.

அரவான் நின்றுகொண்டிருக்க ஸ்வேதன் பீடத்தில் அமர்ந்த பின் “அமர்க, இளவரசே!” என்று பீடத்தை காட்டினான். அரவான் “இல்லை, நான் அவர் வரும் வரை நிற்கின்றேன்” என்றான். “அமர்வது முறைமை” என்றான் ஸ்வேதன். “அமர்ந்தாக வேண்டுமென்று நெறியுள்ளதோ?” என்ற பின் அரவான் மூங்கில் பீடத்தில் அமர்ந்தான்.

படைத்தலைவன் “நான் உடனே திரும்பிச்செல்லவேண்டும்” என்றான். “எங்கிருந்து வருகிறீர்கள்?” என்று ஸ்வேதன் கேட்டான். “ஏழாவது பிரிவின் பதினெட்டாவது துணைப் பிரிவில் இருந்து, அதை யாதவராகிய சாத்யகி நடத்துகிறார். இந்த ஓலை அவர் அளித்தது.” அத்தருணத்தின் விந்தையால் அப்போதுதான் ஸ்வேதன் உளம் மலர்ந்தான். முற்றிலும் புதிய இருவர் இரு திசைகளிலிருந்து கிளம்பி அர்ஜுனனை பார்க்கும்பொருட்டு வந்திருக்கிறார்கள். அவர்களை அவர் மைந்தர் எதிர்கொள்கிறார்கள். ஒருவேளை ஒவ்வொரு நாளுமென மைந்தரும் மாணவரும் அவ்வாறு தேடிவரக்கூடுமோ? சுருதகீர்த்தி அரவானைப் பார்த்ததும் எப்படி எதிர்வினை புரிவான் என்னும் எண்ணம் எழுந்தது. அந்த ஒவ்வாமை மேலும் பெருகியிருக்கும் என்று தோன்றியது.

பீடத்தின் விளிம்பில் இலையில் தவளையென தொற்றி அமர்ந்திருந்த அரவான் விரல்களை ஒன்றுடன் ஒன்று கோத்திருந்தான். சிறிய உதடுகளை மடித்து கவ்வியிருந்தான். மென்மயிர் மீசையும் தாடியும் கரிய பளபளப்பான தோலும் கொண்ட முகத்தில் கண்கள் குழந்தைகளுக்குரிய தெளிவும் கற்றறிந்தோருக்குரிய கூர்மையும் கொண்டிருந்தன. உலூபியின் மைந்தன். நாகர் குலக்கன்னி. நாகமென்று மாறி இளைய பாண்டவர் புணர்ந்து பெற்றெடுத்தவன். இன்று மானுட உருக்கொண்டு அமர்ந்திருப்பினும் எக்கணமும் பாம்பென மாறி நெளிந்து சீறி படமுயர்த்த இவனால் இயலும். பத்து விரல்நகங்களும் நச்சுப்பற்களாகக்கூடும். விழிகள் இமையாமை கொள்ளும். சீறி வாய்திறந்தால் பிளந்த நாக்கு அனலென வெளிவந்து துடித்தாடும்.

கதைகளிலிருந்து மானுடர் எழுந்துவருவதை அவன் முன்னர் கண்டதில்லை. சொற்பரப்பைப் பிளந்து கதைகளை ஈரநீர்த்துளிகளென உதறி அவர்கள் வந்து நிகழ்காலம் முன் நிற்கிறார்கள். இங்குள்ள காற்றும் வெயிலும் அவர்களை உலரச்செய்து பிறிதொருவரைப் போலாக்குகிறது. மெல்ல மெல்ல நாம் அனைத்தையும் மறந்து அவர்களை நமக்கிணையானவர்கள் என்று எண்ணத்தொடங்குவோம். ஆனால் எக்கணமும் திரும்பப் பாய்ந்து அப்பெருநதிக்குள் சென்று மறைந்துவிட அவர்களால் இயலும். கதைகள் என்றுமுள்ளவை. நேற்றென்றும் நாளையென்றும் அறியாது என்றுமுள இன்றில் அலைகொள்பவை. அக்கதைப்பெருக்கில் ஒரு திவலை இவன்.

அவனால் அரவானை நோக்காமல் இருக்க இயலவில்லை. கால் நகங்களிலிருந்து புரிகுழல் அலைவரை மீளமீள பார்த்தான். பழுதற்ற முழுதுடல். முதுமையும் உலகியல் சுமைகளும் இப்போது இளைய பாண்டவரை தளர்த்தியிருக்கலாம். அவரிலிருந்து மீண்டும் மீண்டும் முளைத்தெழுந்துகொண்டே இருக்கிறது அவரென்றாகி மண்ணில் திகழும் இந்திரனின் ஒளி. அரவான் புலித்தோலாடை அணிந்திருந்தான். கழுத்தில் நாகவிழிமணிகளைக் கோத்த மாலை. நாகமண்டலிக் கொடியால் ஆன கங்கணங்கள். நாகமண்டலி பின்னிய கால்தளைகள். பாம்புத்தோலால் ஆன இடைக்கச்சை. அதில் மிகச் சிறிய குத்துவாள். காதுகளில் சிறு நாகக்குழவி சுற்றியிருப்பதுபோன்ற குண்டலங்கள். அதில் இரு ஒளித்துளிகளென கற்கள்.

இவன் அன்னை எங்கிருக்கிறார்? இப்போர் மூண்டெழுந்ததுமே மைந்தனை வாழ்த்தி இங்கு அனுப்பியது அவர்தான் போலும். இப்போரில் நாகர்களுக்கு என்ன இடம்? தன் அம்புப்பெருக்கால் மாநாகங்களின் காண்டவத்தை முற்றழித்தவர் இளைய பாண்டவர். நாகர்களின் வஞ்சம் ஒரு துளி எஞ்சவிடப்பட்டது. அது எங்கோ திரண்டு தன் துளித்தன்மையாலேயே விசைகொண்டு, ஒளிகொண்டு காத்திருக்கிறது என்கிறார்கள். இப்போரில் இந்திரனின் மைந்தனுக்கெதிராக எழுந்த இருபெரும் வல்லமைகள் கதிரவனின் வெங்கதிரும் நாகத்தின் நச்சுத்துளியும் என்று சூதர்கள் பாடுகிறார்கள். இவன் நாகத்தின் குழவி திசைமாறி அனல்நோக்கி நெளிந்தணைவதுபோல் வந்திருக்கிறான்.

புரவிக்குளம்படி கேட்டு அவன் திரும்பிப்பார்த்தான். சுருதகீர்த்தி புரவியிலிருந்து இறங்கி இயல்பாக நடந்து கால்வைத்து பாடிவீட்டின் படிகளிலேறி வந்தான். தொடர்பழக்கத்தினால் அதன் ஒழுக்கை அவன் கால் நன்கு பழகியிருந்தது. முதற்பார்வையிலேயே அவன் அரவானை பார்த்துவிட்டான். அரவான் எழுந்து நின்று கைகூப்பி தலைவணங்கினான். அவன் உடல் மெல்ல நடுங்கத்தொடங்கியதை ஸ்வேதன் கண்டான். சுருதகீர்த்தி அந்த துணைப்படைத்தலைவனைப் பார்த்து புருவம் சுழித்து “செய்தியுண்டா?” என்றான். அவன் தலைவணங்கி “பாண்டவ மைந்தர் சுருதகீர்த்தியை வணங்குகிறேன். நான் சாத்யகியின் முதற்படைத்தலைவன் அரூபன். என்னிடம் படைத்தலைவர் கொடுத்த ஓலை இது. சான்றுக் கணையாழியும் உள்ளது” என்றான்.

சுருதகீர்த்தி வலக்கையை நீட்ட அவன் அந்த ஓலையை அளித்தான். கணையாழியை கையில் வாங்கிவிட்டு திருப்பிக்கொடுத்து ஓலையை கையால் நீவி இருமுறை படித்தான். அவன் மீண்டுமொரு நோக்கு அரவானுக்கு அளிக்கவே இல்லை. ஒரு சொல்லும் உரைக்காமல் ஓலையுடன் உள்ளறைக்குள் சென்றான். துணைப்படைத்தலைவன் நிற்பதா செல்லலாமா என்று குழம்பி உள்ளறையை பார்த்துவிட்டு அரவானை பார்த்தான். ஸ்வேதன் “தங்கள் பணி முடிந்ததென்றால் கிளம்பலாம், படைத்தலைவரே” என்றான். தலைவணங்கி அவன் வெளியே இறங்குகையில் மண்ணுக்கும் பாடி வீட்டிற்குமான அசைவு மாறுபாடை கருத்தில் கொள்ளாமல் கால் வைத்து சற்றே தடுமாறி ஓரிரு அடிகள் முன்னால் வைத்து சென்றான்.

சற்று பின்னகர்ந்து அரவான் நின்றுகொண்டிருந்தான். ஸ்வேதன் “நீங்கள் அமரலாம்” என்றபின் தானும் அமர்ந்தான். அரவான் அறைக்குள் பார்த்தபின் தயங்கினான். உள்ளிருந்து சுருதகீர்த்தி வெளியே வருவான் என்று ஸ்வேதன் எதிர்பார்த்தான். சில கணங்களுக்குப் பின் அவன் வரப்போவதில்லை என்று தோன்றியது. அந்த வாயில் ஒரு விழியென மாறி அவர்களை பார்த்துக்கொண்டிருந்தது. ஸ்வேதன் அமைதியிழந்தான். அரவானை நோக்குவதை தவிர்த்தான். அரவானும் உள்ளே நோக்கவில்லை என்றாலும் அவன் உடல் பட்டாம்பூச்சி இறகென நடுங்கிக்கொண்டிருந்ததை காணமுடிந்தது.

பொழுது ஓடிக்கொண்டிருந்தது. அரவான் இருமுறை அறைவாயிலை பார்த்தபின் மெல்ல தயங்கி பீடத்தில் அமர்ந்தான். இரு கைகளையும் மடிமேல் கோத்து வைத்துக்கொண்டான். அவன் ஏன் உதடுகளை உள் மடித்து வாய்மூடியிருக்கிறான் என்று ஸ்வேதன் எண்ணினான். அது அவனை அஞ்சிய சிறுவனைப்போல் காட்டியது. கைகளை ஒருபோதும் விரல்கோத்து மடியில் வைத்துக்கொள்ளக்கூடாது, அது பணிவென்று உடல்மொழி காட்டும். தோள்கள் முன்தொய்ந்து வளையவும் வழி வகுக்கும். எங்கு அமர்ந்திருந்தாலும் இரு தோள்களையும் பின்தள்ளி நெஞ்சை முன்விரிக்கவேண்டும். அது நம்பிக்கையென வெளிப்படும். எவரையும் பார்க்காதபோது நேர்முன்னால் ஏதேனும் ஒரு பொருளில் விழிநட்டு அசையாதிருக்கவேண்டும் என்றும், ஒருபோதும் விழிதழைந்து கீழ் நோக்கியிருக்கலாகாது என்றும், மறுமொழிகளோ நேர்கூற்றுகளோ உரைக்கையில் முதற்சொல்லும் இறுதிச்சொல்லும் ஒலி குறைந்து மழுங்கிவிடலாகாதென்றும் அவனுக்கு கற்பித்திருந்தனர்.

அவன் அதையெல்லாம் அரவானிடம் சொல்ல விரும்பினான். அவன் அன்னை அச்செய்திகளை அறியாதவராக இருக்கலாம். குலாடர்களைப்போலவே நாகர்களும் அன்னைவழி குலமுறை கொண்டவர்கள். அன்னையருக்குரிய முறைமைகளும் உடல்மொழிகளும் முற்றிலும் வேறு. அவன் அன்னை கலிங்கத்திலிருந்து போர்முறைப் பயிற்சியாளர் ஒருவரை வரவழைத்து அவனுக்கு கற்பித்தார். அவர்கள் ஷத்ரியர்களாக ஆவதற்கான பயிற்சியில் இருக்கும் குடி. இவன் இன்னமும் அந்த எண்ணத்தையே அடையவில்லை. ஷத்ரியர் என்பது ஓர் எதிர்நிலை. எதிர்காற்றுக்கு நெஞ்சுவிரிப்பதுபோல. ஊழுக்கும் இறப்புக்கும் மண்ணுக்கும் சூழுக்கும் எதிராக தருக்குதல்.

உள்ளிருந்து சுருதகீர்த்தி வெளியே வந்தான். அரவானை நோக்கி “முறைப்படி அரச குடியினரல்லாதவர்கள் இங்கு பீடத்திலமர்வது ஏற்கப்படுவதில்லை. தங்களிடம் நான் பீடம் சுட்டவும் இல்லை” என்றான். அரவான் திடுக்கிட்டு எழுந்து கைகூப்பி “பொறுத்தருள வேண்டும்” என்றான். சுவரோடு சாய்ந்து “நான்… இவர் என்னிடம்…” என்று குழறினான். ஸ்வேதன் “இளவரசே, அவருக்கு பீடம் அளித்தவன் நான். நான் அரசகுடியினன். எவருக்கும் எங்கும் பீடமளிக்கும் உரிமை எனக்குண்டு. அதை நீங்கள் மறுப்பீர்கள் என்றால் என்னை இப்போதே தனிப்போரில் நீங்கள் வெல்ல வேண்டும்” என்றான்.

சுருதகீர்த்தி சினத்தில் நெரிந்த முகத்துடன் “இது உங்கள் அரண்மனையல்ல” என்றான். “நான் இருக்கும் இடமெல்லாம் என் மாளிகையே. அதை மறுக்கும் எவரிடமும் போர்புரியவும் கொன்று வெல்லவும் துணிவேன்” என்றான் ஸ்வேதன். சுருதகீர்த்தி தன்னை அடக்கிக்கொண்டு “இது என் தந்தையின் பாடிவீடு. இங்கு நீங்கள் அவருடைய விருந்தினர்” என்றான். ஸ்வேதன் குரலை உயர்த்தாமல் அழுத்தம் ஏறிய சொற்களுடன் “அதை அவரிடமும் நீங்கள் கருதியிருக்க வேண்டும். அவரும் அரசகுடியினர் ஒருவரின் ஆணையோலையும் முத்திரையும் கொண்டு உங்கள் தந்தையை பார்க்க வந்தவர். இங்கு எவரை அமரவைக்கவேண்டும் எழவைக்கவேண்டும் என்று முடிவெடுக்கும் உரிமைகொண்டவர் அவரை அனுப்பியவரும் அவருடைய ஓலைபெறுபவருமே ஒழிய குடில்காப்பாளரான நீங்கள் அல்ல. இவர் தனக்கு பீடம் மறுக்கப்பட்டதன் பொருட்டு உங்களை தனிப்போருக்கு அழைக்க முடியும். அவருடன் தனிப்போர் புரியும் உரிமையை உங்கள் தந்தை உங்களுக்கு அளிக்கவில்லை என்பதனால் இங்கே அவர்முன் பணியவும் வேண்டியிருக்கும். அவ்விழிவை உங்களுக்கு அளிக்காமலிருப்பது அவர் உங்களுக்கு அளிக்கும் கொடை” என்றான்.

சுருதகீர்த்தி பற்களைக் கடித்து முகம் சிவக்க “முறைமைகளை நானும் அறிவேன். எனக்கு எவரும் கற்பிக்கவேண்டியதில்லை” என்றபின் எவரையும் நோக்காமல் “இந்தப் பாடிவீட்டில் அரசகுடியினரன்றி பிறர் அமர்ந்திருப்பதை நான் விரும்பவில்லை. இப்போதே அவர்கள் கிளம்பிச் செல்வார்களென்றால் அதுவும் நன்றே. அதை எந்த அவையிலும் நான் எழுந்து சொல்கிறேன்” என்றபின் திரும்பி உள்ளே சென்றான்.

அரவான் அவன் உள்ளே சென்றதை நோக்கியபின் ஸ்வேதனைப் பார்த்து மெல்லிய புன்னகை புரிந்தான். அப்போதுதான் அவன் யார் என்று ஸ்வேதனுக்கு புரிந்தது. முற்றிலும் புதிய சூழலை எதிர்கொண்டமையால் உடலில் பதற்றமும் தத்தளிப்பும் கூடியிருந்தும் உள்ளத்தில் மாறாநிலை கொண்டிருப்பவன் அவன். அத்தருணத்தை எதிர்கொள்கையிலேயே உள்ளே ஒருபாதி விலகி நின்று நோக்கி புன்னகை கொள்ளவும் இயல்கிறது அவனுக்கு. எந்நிலையிலும் தன்னை மறந்தொரு சொல்லோ செயலோ அவனிடமிருந்து எழப்போவதில்லை. அவன் களம்நின்று பொருதும் ஆற்றல் கொண்டவன் என்பதை அப்புன்னகையே உணர்த்தியது. ஸ்வேதன் புன்னகை புரிந்து “உங்கள் பொருட்டு நானும் நின்றுகொள்கிறேன்” என்றான். அரவான் மெல்ல தலைவணங்கினான்.

முந்தைய கட்டுரைவெண்முரசு சென்னை விமர்சனக்கூட்டம், ஜூலை2018
அடுத்த கட்டுரைசிரபுஞ்சி, அதிகாரிகள் -கடிதங்கள்