‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 88

87. கோட்டை நுழைவு

flowerபீடத்தை ஓங்கித் தட்டிய விராடர் “மூடர்களே… இழிமக்களே…” என்று கூவினார். ஏவலர் உள்ளே வந்து வணங்க “எங்கே? தூதுச்செய்திகள் என்னென்ன? எங்கே ஒற்றர்கள்?” என்றார். “அரசே, சற்றுமுன்னர் வந்த செய்திதான் இறுதியானது…” என்றான் காவலன். “அது வந்து இரண்டு நாழிகை கடந்துவிட்டது. கீழ்மக்களே… ஒற்றர்கள் என்ன செய்கிறார்கள்? இப்போதே எனக்கு அடுத்தகட்டச் செய்தி வந்தாகவேண்டும். இக்கணமே…” என்று கூவினார். காவலன் “அமைச்சரிடம் அறிவிக்கிறேன், அரசே” என்று தலைவணங்கி வெளியே சென்றான்.

குங்கன் புன்னகையுடன் “அஞ்சவேண்டியதில்லை அரசே, நல்லசெய்தி வரும்” என்றான். “எதை நம்பி இருப்பது இங்கே? அந்த மூடன் ஒளிந்துகொண்டிருக்கிறான். அவனை கொல்வதாக மிரட்டி இழுத்துச்சென்றிருக்கிறாள் ஆணிலி. இரு ஆணிலிகளும்…” கையை வீசி “பிழைசெய்துவிட்டேன். நான் சென்றிருக்கவேண்டும். நான் அங்கே இறந்திருந்தால்கூட பெருமைதான் அதில்” என்றார் விராடர். குங்கன் “நாம் இனி செய்வதற்கொன்றுமில்லை, பொறுத்திருப்பதைத் தவிர” என்றான்.

காவலன் உள்ளே வந்து வணங்க “என்ன செய்தி? எங்கே ஓலை?” என்றார் விராடர். “அரசியும் சைரந்திரியும்” என்றான் காவலன். “அவர்களை யார் இங்கே அழைத்தது?” என்று விராடர் சீற “தாங்கள் விடுத்த ஆணைப்படிதான்…” என்றான் காவலன். “வரச்சொல்” என்றபடி அவர் சென்று பீடத்தில் அமர்தார். சுதேஷ்ணை உள்ளே வந்து “என்ன செய்தி?” என்றாள். “உன் மைந்தன் கௌரவர் படையை ஓடஓட துரத்தி வெற்றிசூடி வருகிறான். போதுமா?” சுதேஷ்ணை முகம் மலர்ந்து “மெய்யாகவா?” என்றாள். “அறிவிலி… அறிவிலிகளில் முதல்வி” என்றார் விராடர்.

முகம் சிவக்க “அவன் வெல்வான், நான் அறிவேன்” என்றாள் சுதேஷ்ணை. “வாயை மூடு… உன்னை இங்கே அழைத்தது யார்?” என்று விராடர் கூவியபடி எழுந்தார். “நீங்கள்தான்… அழைக்காமல் வர நான் ஒன்றும் முறைமை தெரியாத காட்டினம் அல்ல. தொல்குடி ஷத்ரியர்கள் முறைமையில் வாழ்பவர்கள்.” விராடர் “உன் மகன் அங்கே முறைமைப்படி போரிட்டுக்கொண்டிருக்கிறான்… நீயும் செல்! அவனுக்கு முறைமைப்படி வாய்க்கரிசி போடு” என்றார். அவர் முகம் சுளித்து பற்கள் தெரிந்தது சிரிப்பதுபோல காட்டியது. “எண்ணிப் பேசவேண்டும்… அரசன் முறைமீறிப் பேசினால் மாற்றுச்சொல்லும் அதேபோல எழும்” என்றாள் சுதேஷ்ணை. “எங்கே பேசு பார்ப்போம்” என்று விராடர் கையை ஓங்கினார்.

சைரந்திரி தாழ்ந்த குரலில் “அரசி, வேண்டாம்” என்றாள். விராடர் “நீ எப்படி உள்ளே வந்தாய்? சேடியர் எப்படி அவைக்குள் நுழையமுடியும்? போ வெளியே!” என்றார். சைரந்திரி “சென்று பீடத்திலமர்க!” என்றாள். விராடர் “என்ன?” என்று சொல்ல “படைகண்டு நடுங்கி அமர்ந்தது உத்தரர் மட்டுமல்ல” என்றாள். விராடர் படபடப்புடன் ஏதோ சொல்ல வாயெடுத்தார். “படைமுகம் கண்டதும் உத்தரர் நிமிர்ந்து எழுந்தார். இன்று அவர் உரைத்த சொற்களைத்தான் நகர் பேசிக்கொண்டிருக்கிறது” என்றாள் சைரந்திரி. “அவை அரசர் பேசியிருக்கவேண்டியவை.”

அவர் இருமுறை கையை அசைத்தபின் சென்று பீடத்திலமர்ந்தார். “தன்னை எண்ணி நாணுபவர்களின் மிகைச்சினம். அதை பிறர் எளிதில் உணரவும் முடியும்” என்றாள். விராடர் வலிகொண்டவர்போல தலையை அசைத்தார். ஏதோ சொல்லவந்தபின் கண்களை மூடிக்கொண்டு பெருமூச்சுவிட்டார். சைரந்திரி சுவர் சாய்ந்து நிற்க குங்கன் தலைகுனிந்து அமர்ந்திருந்தான். பெருமூச்சுடன் அசைந்த விராடர் “என்ன செய்தி என்றே தெரியவில்லை” என்றார்.

சுதேஷ்ணை “செய்தி இன்னும் சற்றுநேரத்தில் வரும்” என பீடத்தில் அமர்ந்தாள். துடித்து எழுந்து “நீ ஏன் இங்கிருக்கிறாய்? போ” என்று விராடர் உரக்க கூவினார். “என் மைந்தனின் வெற்றிச்செய்தியை இங்கே அமர்ந்து நான் கேட்கவேண்டும். உங்கள் விழிகளை நோக்கிவிட்டுச் செல்லவேண்டும்… அதற்காகவே வந்தேன்” என்றாள் சுதேஷ்ணை. “செல்… வெட்டி வீழ்த்திவிடுவேன்… விலகிச்செல்!” என்று விராடர் கூச்சலிட்டார். “வெட்டுங்கள் பார்ப்போம்” என்றாள் சுதேஷ்ணை. “இப்போது நான் விழிகாட்டினால் இவள் உங்களை கைகள் பிணைத்து இழுத்துச்செல்வாள்… வாளேந்தத் தெரிந்த கைகள் இவை” என்றாள்.

விராடர் சைரந்திரியை நோக்கிவிட்டு “என்னை அச்சுறுத்துகிறீர்களா?” என்றார். குங்கன் “அரசே, இதெல்லாம் வீணாக முட்களால் குத்திக்கொண்டு நாம் ஆடுவது. நாம் செய்வதற்கொன்றுமில்லை. செய்திக்காக காத்திருப்போம்” என்றான். “ஆம்” என்றார் விராடர். தன் கைகளைக் கோத்தபடி பீடத்தில் உடல்குறுக்கி அமர்ந்தார். அறைக்குள் அமைதி நிலவியது. அரண்மனைச் சாளரங்கள் காற்றில் இறுகிநெகிழ்ந்து ஒலிக்கும் ஓசைமட்டும் கேட்டுக்கொண்டிருந்தது.

விராடர் எழுந்து “வீண்பொழுது… என்ன செய்வதென்றே தெரியவில்லை. நாம் சற்று ஆடுவோம்” என்றார். குங்கன் அசையாமல் அமர்ந்திருந்தான். “குங்கரே, உம்மிடம் நான் ஆணையிட்டேன். சூதுப்பலகையை எடும்” என்றார் விராடர். குங்கன் “இல்லை, நான் இனி சூதாடப்போவதில்லை” என்றான். “ஏன்?” என்றார் விராடர். “இதோ, சற்றுமுன் புலரியின் நான்காம் நாழிகையுடன் ஒரு காலகட்டம் முடிந்தது” என்றான் குங்கன். “என்ன சொல்கிறீர்? என்று விராடர் உரக்க கேட்டார். “இனி கையால் சூதுக்காய்களை தொடுவதில்லை என்று சூளுரைத்திருந்தேன். ஆழத்திலுறைந்த பிறிதொருவன் அவ்விழைவை மிச்சம் வைத்திருந்தான். இன்று அவனும் ஆடி நிறைந்துவிட்டான்.” விராடர் “என்ன உளறிக்கொண்டிருக்கிறீர்? இது என் ஆணை. எடும் சூதுப்பலகையை!” என்றார்.

“உயிரிழந்தாலும் அதைத் தொடுவதில்லை” என்றான் குங்கன். விராடர் “ஏய்… அமைச்சரை அழைத்து வா… இப்போதே…” என்றார். சைரந்திரி “இனி எந்த ஆணையையும் நான் ஏற்றுக்கொள்வதில்லை” என்றாள். “அவர் சொன்ன அதே பொழுதுநிறைவு எனக்கும்தான்.” விராடர் “உங்களுக்கென்ன பித்துப் பிடித்திருக்கிறதா? என்னிடம் விளையாடுகிறீர்களா?” என்றார். “உங்கள் இருவரையும் கழுவிலேற்றுகிறேன். இந்நகரை ஆள்பவன் எவன் என்று காட்டுகிறேன்… இழிமக்களே…” அரசியை நோக்கி “நீ அளித்த இடம் இது… என்னை இழிவு செய்வதற்காகவே இவளை பேணுகிறாய்” என்று இரைந்தார்.

அவர் கதவில் கைவைக்க அது திறந்து அங்கே காவலன் நின்றிருந்தான். தலைவணங்கி “பேரமைச்சர் ஆபர்” என்றான். அதற்குள் ஆபர் உரத்த குரலில் “செய்தி வந்துள்ளது, அரசே. நம் இளவரசர் வென்றிருக்கிறார். கௌரவர்களை ஓட ஓட துரத்திவிட்டார். மச்சர்களின் குருதி தோய்ந்த வாளுடன் வந்துகொண்டிருக்கிறார்” என்று கூவினார். சுதேஷ்ணை பாய்ந்தெழுந்து “ஆம். நான் அதை நன்கறிவேன். நான் அவன் வருவதையே என் உள்ளத்தால் கண்டுவிட்டிருந்தேன். அவன் என் மகன். தொல்குடி ஷத்ரியரின் குருதியிலெழுந்தவன் அவன். தெய்வங்களே… மூதாதையரே…” என்று கண்ணீர் வழிய நெஞ்சை அழுத்தியபடி கூவினாள்.

விராடர் தயங்கிய குரலில் “அது உறுதிப்படுத்தப்பட்ட செய்திதானா? எவராவது…” என முனகினார். ஆபர் “ஏழு செய்திகள் வந்துள்ளன. எப்படி போர் நிகழ்ந்ததென்றே விரிவாக எழுதியிருக்கிறான் ஓர் ஒற்றன். அனலை துணைகொண்டு வென்றிருக்கிறார்கள். நம் இளவரசர் களத்தில் பொருபுலி என நின்றிருக்கிறார்…” என்றார். விராடர் சில கணங்கள் விழிமலைக்க நோக்கி நின்றார். பின்னர் கையை நீட்டி தன் அரசியின் தோளை பற்றிக்கொண்டார். அவள் அவர் கைகளைப் பற்றியபடி “நம் மைந்தன்… அரசே, நமது மைந்தன் அவன்” என்றாள். “ஆம், நான் அவனைப்பற்றி பிழையாக எண்ணிவிட்டேன். கசந்தும் எள்ளியும் கடுஞ்சொல்லாடிவிட்டேன்.” அவர் நிற்கமுடியாமல் தள்ளாட அரசி அவரைப்பற்றி பீடத்தில் அமரச்செய்தாள்.

“சூசீமுக மலைக்குமேல் படையுடன் சென்றிருக்கிறார்கள். அங்கிருந்து மலையிறங்கும் சுழல்காற்றுபோல மச்சர்கள்மேல் பாய்ந்திருக்கிறார்கள். தலைநின்று தேரில்சென்று வில்லேந்தி களம் நிறைத்திருக்கிறார் உத்தரர்…” காவலன் வந்து தலைவணங்கினான். அவன் அளித்த ஓலைகளை வாங்கிய ஆபர் “அனைத்தும் ஒரே செய்திகளையே அளிக்கின்றன. நம் இளவரசர் வென்று வருகிறார்!” என்றார்.

விராடர் “நான் அவனை இழித்துரைத்தேன்… எத்தனை சொற்கள்!” என்றார். அவர் தொண்டை ஏறியிறங்கியது. குரல் அடைத்தது. “அவனை பழிக்காத ஒருநாளை கடந்ததில்லை நான்” என்றார். சுதேஷ்ணை “தாழ்வில்லை, நீங்கள் அவன் தந்தை அல்லவா?” என்றாள். “தந்தையரால் பழிக்கப்படாத மைந்தர் எங்குள்ளனர்?” குங்கன் “அரசே, தந்தையர் மைந்தரை பழித்துரைப்பதெல்லாம் மானுடரோ தெய்வங்களோ சினந்து அதற்கு எதிர்மொழி ஒன்றை சொல்லிவிடமாட்டார்களா என்ற ஆவலினால்தான்” என்றான்.

ஆபர் “இனி இந்நாட்டின் வெற்றியையும் வாழ்வையும் பற்றிய கவலையே தேவையில்லை, அரசே” என்றார். “நாடு எப்படிப் போனால் என்ன, என் மைந்தன் வாழ்வான். என் மைந்தன் வெல்வான்” என்றார் விராடர். “இக்கணம் இங்கிருந்தே கானேகவும் நான் ஒருக்கமே. இனி இப்புவியில் நான் அடைய ஏதுமில்லை… நிறைவுற்றேன். மூதாதையர் முன் சென்று நின்று முகம் நோக்குவேன்.” சுதேஷ்ணையின் தோளை வளைத்துப்பிடித்து “ஆம், நான் எளியவனே. ஒருகளம்கூட வெல்லாதவனே. என்னை வென்றுகடந்திருக்கிறான் என் மைந்தன். கௌரவப் படை கடந்தவன். நாளை இப்பாரதவர்ஷத்தின் மாமன்னன் என அறியப்படுவான். அவன் தந்தை என்று என் பெயரும் இலங்கும்…” என்றார்.

சுதேஷ்ணை “செய்திகளை விரிவாகப் படியுங்கள், அமைச்சரே” என்றாள். அவள் கண்களிலிருந்து நீர் வழிந்தது. முகம் சிரிப்பில் விரிந்திருந்தது. ஆபர் “இங்கே கோட்டைமுகப்பில் வஞ்சினம் உரைத்துவிட்டு தேரேறிச் சென்றதுமுதல் இளவரசர் ஒவ்வொரு கணமும் படைகளை வழிநடத்திக்கொண்டிருந்தார். ‘நாம் வெல்வோம், ஐயமே வேண்டாம்’ என்று அவர் சொன்னார். தன் வெற்றியை நன்கறிந்திருந்தார். ஆனால் சூசீமுக முனையைச் சென்றடைந்ததும்தான் நம் வீரர்களுக்கு அவர் என்ன சொல்கிறார் என்று புரிந்தது” என்றார்.

குங்கனை நோக்கி திரும்பிய விராடர் “குங்கரே, உங்களுக்கு எப்படி தெரிந்தது என் மைந்தன் வெல்வான் என?” என்றார். “அவருடன் பிருகந்நளை சென்றதனால்” என்றான் குங்கன். “அவளா? அந்த ஆணிலி என்ன செய்திருப்பாள்?” என்று விராடர் கேட்டார். “தேர் தெளித்து உத்தரரை வெற்றிக்கு அவள் கொண்டுசெல்வாள் என அறிந்திருந்தேன்.” விராடர் சினத்துடன் “என்ன சொல்கிறீர்? என் மைந்தன் திறனற்றவன், அவன் வெற்றி அந்த ஆணிலியால்தான் என்கிறீரா?” என்றார். “அரசே, நான் சொல்வது…” என்று குங்கன் சொல்லெடுப்பதற்குள் சுதேஷ்ணை “என் மைந்தன் வென்று மீள்கிறான். அப்புகழை ஊரறியா பேடிக்கு அளிக்க எண்ணுகிறீரா?” என்றாள்.

“அரசி, சிக்கிமுக்கிக் கற்களில் கனலுள்ளது. எழுப்புவதற்கு கைகள் வேண்டும்” என்றான் குங்கன். விராடர் “இழிமகனே, உன் சிறுமதியை காட்டிவிட்டாய். என்ன சொல்கிறாய்? விராடகுலத்துப் பிறந்த இளவரசன் செயலற்றவன் என்றா? அவனை இயக்கியவள் அந்தக் கீழ்பிறப்பு என்றா?” என்று கூவியபடி எழுந்தார். “உண்மை அது” என்று குங்கன் சொல்வதற்குள் விராடர் “சூதப்பிறப்பே” என கூச்சலிட்டபடி நடுவே குறும்பீடத்திலிருந்த பனையோலை விசிறியை எடுத்து குங்கனை அடிக்கத்தொடங்கினார். தோளிலும் முகத்திலும் அடிகள் விழ குங்கன் தலையை குனித்துக்கொண்டான். ஆனால் கையெடுத்து தடுக்கவில்லை.

ஆபர் எழுந்து வந்து “அரசே, நிறுத்துங்கள்! நிறுத்துங்கள், அரசே!” என்று கூவினார். விராடர் வெறிகொண்டிருந்தமையால் ஆபரை ஒரு கையால் விலக்கி மறுகையால் குங்கனை மீண்டும் மீண்டும் அடித்தார். ஆபர் உரக்க “அரசே, நிறுத்துக! இது அந்தணன் ஆணை!” என்றார். விராடர் கையில் விசிறியுடன் திகைத்து மூச்சிரைக்க “இவர் இவர் என் மைந்தனை…” என்றபின் விசிறியை வீசிவிட்டு அழத்தொடங்கினார். “அவன் மீண்டெழுந்தாலும் இவர்கள் விடமாட்டார்கள். அவனை சொல்லிச்சொல்லியே வீணனாக்கிவிடுவார்கள். தெய்வங்களின் கொடையைக்கூட கைநீட்டி புகுந்து தடுக்கிறார்கள்” என்றார். தலையில் அறைந்தபடி “என் மைந்தன் வென்றான். அவன் கௌரவர்களை வென்றான்” என்று கூவினார்.

ஆபர் ஏதோ சொல்ல முன்னெடுக்க குங்கன் கைகூப்பி விழியசைத்து வேண்டாம் என்றான். அரசரை நோக்கி திரும்பி “இல்லை அரசே, உத்தரரே வென்றார். எளியோன் சொல்லை பொறுத்தருள்க. வென்றவர் இளவரசர் உத்தரர். அவர் புகழ் என்றும் வாழும்” என்றான். அச்சொற்களைக் கேட்காதவர்போல விராடர் தலைகுனிந்து அமர்ந்திருந்தார். பின்னர் மெல்ல விம்மினார். சைரந்திரி நிலைத்த விழிகளால் குங்கனை நோக்கிக்கொண்டிருந்தாள். ஆபர் “முகம் கிழிந்துள்ளது, குங்கரே… குருதி வருகிறது” என்றார். கையால் தன் கன்னத்தை தொட்டபின் “சிறிய புண்தான்” என்றான் குங்கன்.

flowerஉத்தரனின் தேர் நகரெல்லைக்குள் நுழைவதற்குள்ளாகவே விராடபுரி வாழ்த்துக் கூச்சல்களால் கொந்தளிக்கத் தொடங்கிவிட்டிருந்தது. அரசநெடுஞ்சாலையில் விராடப்படையின் வேளக்காரர்கள் சூழ அவனுடைய தேர் நுழைந்ததும் முதல் காவல்மாடம் முரசொலி எழுப்பியது. அதைக் கேட்டு தலையானை ஒலிகேட்ட யானைக்கூட்டமென அத்தனை மாடங்களும் முழங்கின. கோட்டைமுகப்பில் உத்தரனின் காகக்கொடி மேலெழுந்தது. நகர்மக்கள் அனைவரும் சாலையின் இரு பக்கங்களிலும் செறிந்தனர். உப்பரிகைகளிலும் இல்லத்திண்ணைகளிலும் பெண்முகங்கள் அடர்ந்தன.

நகர்க்காவல் வீரர்களில் ஒரு திரள் வாழ்த்தொலி எழுப்பியபடி புரவிகளில் அவனை எதிரேற்கச் சென்றது. செல்லச்செல்ல அது பெருகி ஒரு படையென்றே ஆகியது. படைக்கலங்களையும் தலைப்பாகையையும் எறிந்து பிடித்துக்கொண்டு புரவிமேல் எம்பி எம்பி வெறிக்கூச்சலிட்டபடி அவர்கள் சென்றனர். தொடர்ந்து காலாள்படையினர் கூவி ஆர்த்தபடி ஓடினர். “விராடபுரிக்கு வெற்றி! மாவீரர் உத்தரருக்கு வெற்றி! காகக்கொடிக்கு வெற்றி!” என்று அவர்கள் கூவினர். சிலர் நெஞ்சில் அறைந்துகொண்டு அழுதனர்.

ஓசைகேட்டு தேர்த்தட்டில் அரைமயக்கத்திலிருந்த உத்தரன் எழுந்து கையூன்றி அமர்ந்தான். தேரை ஓட்டிக்கொண்டிருந்த பிருகந்நளையைக் கண்ட பின்னரே அவன் நிகழ்வதென்ன என்று உணர்ந்து “எங்கு வந்துள்ளோம்? என்ன ஓசை அது?” என்றான். “விராடபுரி அணுகிவிட்டது” என்றாள் பிருகந்நளை. “மக்கள் வாழ்த்தொலி எழுப்புகிறார்கள்.” உத்தரன் “வாழ்த்தொலியா?” என்றான். “ஏன்?” என்றாள் பிருகந்நளை. “நான் கனவில் போர்க்கூச்சலென எண்ணினேன்.” பிருகந்நளை புன்னகை புரிந்தாள். “போர் என எண்ணி என் உள்ளம் பொங்கியது என்றால் ஐயுறமாட்டீர்கள் என எண்ணுகிறேன். வாழ்த்துக்கூச்சல் என்று அறிந்தபோது சிறு ஏமாற்றமே எழுந்தது.”

“வாழ்த்துக் கூச்சல்கள் சலிப்பூட்டுபவை” என்றாள் பிருகந்நளை. “ஆம், நீங்கள் அறியாததா?” என்றான் உத்தரன். பிருகந்நளை மறுமொழி சொல்லவில்லை. “நான் எப்படி போரிலிறங்கினேன்? என்னுள் இருந்த வேறு எவரோ எழுந்து வந்து போராடியதுபோல. நானே அகன்று நின்று அவனைக் கண்டு வியப்பதுபோல… இப்போது எண்ணினால் கனவென்றே தோன்றுகிறது” என்றான் உத்தரன். கைதூக்கி சோம்பல்முறித்தபோது வலியை உணர்ந்தான். திரும்பாமலேயே அதை உணர்ந்து “பெரிய புண் அல்ல” என்றாள் பிருகந்நளை. “ஆனால் ஆறுவதற்கு சில நாட்களாகும்.”

“என் கனவில் எத்தனைமுறை கண்டது இது! விழுப்புண் பெற்று மீளுதல். குடியினரால் வாழ்த்துரைக்கப்படுதல். மலர்மழை நடுவே நகருலா… இன்று அனைத்தும் மிகச் சிறியவை எனத் தோன்றுகிறது” என்றான் உத்தரன். “இப்புவியில் முதன்மையான இன்பம் என்பது தன்னையறிதலே. தன் ஆற்றலை மட்டும் அல்ல எல்லைகளை அறிதலும் இனியதே.” பிருகந்நளை “போரும் தவமும்தான் தன்னையறிவதற்கான இரு வழிகள் என்பார்கள்” என்றாள். “ஆம், என்றாவது ஒருநாள் தவமும் செய்யவேண்டும்” என்றான் உத்தரன்.

திரும்பி நோக்கி புன்னகையுடன் “எப்போது நீங்கள் உங்களை அறியத்தொடங்கினீர்கள் என்று நான் கூறவா?” என்றாள் பிருகந்நளை. “படைநிரைகள் முன் தேரில் வந்து நின்றபோது.” உத்தரன் சிரித்து “ஆம், முதற்கணம் என்மேல் ஓர் எடைமிக்க பொருள் வீசப்பட்டது போலிருந்தது. கால்கள் நடுங்கலாயின. எண்ணங்களில்லாமல் நெஞ்சு நிலைத்திருந்தது. பின்னர் நிலம் வில்லென்றாகி என்னை வானோக்கி எய்தது” என்றான். “நான் அணிவகுத்து படைக்கலம் ஏந்தி நின்றிருக்கும் போர்ப்படைத்திரளை அதுவரைக்கும் கண்டதில்லை… அது வெறும் காட்சி அல்ல… எப்படி சொல்வேன்? நான் அறியவேண்டிய ஒரு முதல் நூலின் பக்கங்கள் முழுமையாகத் திறந்துகிடப்பதுபோல. ஒரே கணத்தில் நான் அதை வாசித்துவிட்டதுபோல.”

அவனுக்கு மூச்சிரைத்தது. சொல்ல வந்ததை சொல்ல முடியவில்லை என உணர்ந்தவன்போல “எப்படி சொல்வதென்று தெரியவில்லை… நாகத்தைக் கண்டால் புரவி சிலிர்க்குமே அதைப்போல ஒரு பதற்றம்… அப்போது விதையிலிருந்து கீறி எழுந்து ஒரே கணத்தில் மரமாக ஆனேன்” என்றவன் புன்னகைத்து “இந்த ஒப்புமையைக்கூட எங்கிருந்தோ எடுத்துக்கொண்டிருக்கிறேன். என்னிடம் சொற்கள் இல்லை” என்றான். பிருகந்நளை “உங்கள் குருதி அறிந்திருக்கிறது” என்றாள்.

“ஆம், என் மூதாதையரின் குருதி இது. மாமன்னர் நளன் என என்னை நான் உணர்ந்தேன் களத்தில்” என்றான் உத்தரன். “என் கைகள் வில்லம்பை முன்னரே அறிந்திருந்தன என்று தோன்றியது. எனக்குத் தெரியாததை என் கைகள் அறிந்திருந்தன. இன்னும் சற்று பயின்றால் நீங்கள் இல்லாமலேயே என்னால் கர்ணனை எதிர்கொண்டிருக்க முடியும்.” பிருகந்நளை “உங்கள் விழிகளை நோக்கியிருக்கிறேன். அவை படைக்கலப் பயிற்சியை ஒருகணமும் தவறவிட்டதில்லை. உள்ளிருந்து பிறிதொருவர் அதை நோக்கி பயின்றுகொண்டிருந்திருக்கிறார்” என்றாள்.

“இப்போது உங்களுக்கு பிழைத்த அம்புகளைவிட தொட்ட அம்புகள் மிகை. ஆனால் பயிற்சிக்களத்தில் நின்று அம்பெய்யத் தொடங்கும்போது மேலும் இலக்குகள் பிழைப்பதை உணர்வீர்கள்” என்றாள். “ஏன்?” என்றான் உத்தரன். “இளவரசே, களத்தில் நின்றிருப்பது மற்றொன்று. உள்ளமும் கைகளும் விழிகளும் புலன் ஒன்றென்று ஆகி அக்கணத்தில் மட்டுமென நிலைகொள்வது அது. அது உங்களுக்கு இயல்பாகவே கைவருகிறது. முதல் அம்பை விட்டதுமே அங்கு சென்று நின்றுவிட்டீர்கள். சிம்மம் குருதி வாடையை தன் குருதியால் அறிகிறது” என்றாள் பிருகந்நளை. “ஆனால் விற்பயிற்சி என்பது முற்றிலும் வேறு. சினமின்றியும் போர்முனையின் உச்சநிலை இன்றியும் அம்பும் அகமும் ஒன்றென்றாவது அது. அதை பயில்க!”

“ஆம்” என்றான் உத்தரன். “இன்னமும் ஓராண்டு. மிகையென்றால் ஈராண்டு. வில்லுடன் உங்கள் முன் வந்து நிற்பேன்.” பிருகந்நளை புன்னகைத்தாள். “இது முதல் போர். இங்கே அத்தருணத்தின் தெய்வமெழுதல் உங்களை நிற்கச்செய்தது. அடுத்த போர் இப்போரின் நினைவுகளால் ஆனது. அந்நினைவே உங்களை தன்னை மறக்கவிடாது. எனவே தெய்வம் எழாது. இவ்வெற்றி ஆணவமாகச் சமைந்தது என்றால் தெய்வங்கள் எதிரணியில் சென்று சேரவும்கூடும். இனி உங்கள் போர்களை வெல்லப்போவது நீங்கள் மட்டுமே. அதற்கு பயிற்சி ஒன்றே கைகொடுக்கும். போரில் முற்றிலும் விலகி நின்று வெறும் பயிற்சியொன்றாலேயே ஈடுபடுகையிலேயே எப்போதும் எங்கும் வெல்லும் வீரர் என்றாகிறீர்கள்” என்றாள்.

“இனி போர்களை உங்கள் கைகளே நிகழ்த்தட்டும். உள்ளம் போரை முழுமையாகக் காணும் தொலைவொன்றில் ஊழ்கத்தில் அமையட்டும்.” உத்தரன் சில கணங்களுக்குப்பின் “நீங்கள் நான் எண்ணுபவர்தானா?” என்றான். பிருகந்நளை ஒன்றும் சொல்லாமல் புரவியை சவுக்கால் தட்டினாள். “பிறிதொருவராக இருக்க முடியாது” என்றான் உத்தரன். “உள்ளத்தில் இசையோகிக்கு எப்பொருளும் இசைக்கலமே என்பார்கள். நான் உங்கள் கைகளில் வெறும் கிளிஞ்சல்.” பிருகந்நளை புன்னகைத்து திரும்பிக்கொண்டாள். அவள் மறுமொழி சொல்லப்போவதில்லை என்றுணர்ந்து உத்தரன் மீண்டும் அமைதியடைந்தான்.

புயல் பெருகிவந்து சூழ்ந்துகொள்வதுபோல விராடபுரியின் மக்கள்திரள் அவன் தேரை தன்மேல் எடுத்துக்கொண்டது. அவன் அந்த முகங்களை பார்த்தான். அந்த மெய்ப்பாடுகளை களிவெறி என்றும் கொலைவெறி என்றும் கடுந்துயர் என்றும் தாளாவலி என்றும் தெய்வமெழுந்ததென்றும் பேயுருக்களென்றும் எப்படி வேண்டுமென்றாலும் சொல்லலாம் என்று தோன்றியது. இதோ இக்கிழவன் சிரிக்கிறானா அழுகிறானா? இவன் என்னை வாழ்த்துகிறானா நெஞ்சிலறைந்து தீச்சொல்லிடுகிறானா? இவன் என்மேல் மலர் வீசுகிறானா வாள் எறிகிறானா? உச்சங்களனைத்தும் ஒன்றேதானா? உச்சங்களைத்தான் தெய்வம் என்றார்களா? அங்கு செல்ல அஞ்சித்தான் மானுடர் இங்கு எளிதென வாழ்கிறார்களா?

அவர்கள் அத்தனைபேரும் தன்னை ஏளனம் செய்தவர்கள் என்பதை அவன் அப்போது உணர்ந்தான். அவன் நோக்காதொழிந்த அத்தனை விழிகளையும் நோக்கி கணக்கு வைத்திருந்த ஒருவன் அவனுள் இருந்து எழுந்தான். அவர்களின் ஏளனத்தை வெல்லும்பொருட்டே அறிவின்மையொன்றை அணிந்துகொண்டிருந்தேன். கொடிய தந்தையின் உள்ளத்தைக் கவர ஆடைதுறந்து வந்து நிற்கும் இளமைந்தன் போலிருந்தேன். என்னை ஏளனம் செய்ய வைப்பதனூடாக அவர்கள் என்னை வெறுக்காமல் பார்த்துக்கொண்டேன். அவர்கள் உள்ளத்தின் ஆழத்தில் அறியாச் சிறுவனாக வாழ்ந்தேன்.

சூழ்ந்து அலையடித்த வாழ்த்தொலிகளுக்கு நடுவே இடையறாது பெய்த மலர்மழையில் கைகூப்பி நின்றபடி அவன் கணம்கணமாக வாழ்ந்து வந்துகொண்டிருந்தான். பெண்கள் சூழ இருந்த தருணங்களை கண் முன் என நோக்கினான். அவர்களுக்குள் உறையும் அன்னையரையே எனக்குச் சூழ அமர்த்திக்கொண்டிருந்தேன். அவர்கள் மடியில் தவழும் மகவென்றிருந்தேன். என்னை இகழ்கையில் இவர்கள் குற்றவுணர்வு கொண்டிருந்தார்களா? தங்கள் எண்ணங்கள் தோற்கடிக்கப்படுவதை இவர்கள் ஏன் கொண்டாடுகிறார்கள்?

குளிர்காற்றுபோல வந்து அறைந்த நடுக்கம் ஒன்றால் அவன் விழப்போனான். தூணைப் பற்றியபடி நிலைப்படுத்திக்கொண்டு அவர்களை நோக்கினான். இவர்கள் எல்லா எதிர்பாராமைகளையும் கொண்டாடுவார்கள். இன்று இவர்கள் அறிந்தவை அனைத்தும் பொய்யென்று நாளை சொல்லப்பட்டால் அதனுடன் சென்று சேர்ந்துகொள்வார்கள். அங்கு நின்று கூத்தாடுவார்கள். அத்தருணத்தில் வாளை உருவிக்கொண்டு அக்கூட்டத்தின் நடுவே பாய்ந்து முகம் விழிநோக்காது வெட்டி வீழ்த்தவேண்டும் என்னும் வெறியே மீறியெழுந்தது. அவர்களின் குருதியிலாடவேண்டும். அள்ளிப்பருகவேண்டும். காய்ச்சல்கண்டவன்போல நடுங்கியபடி அவன் நின்றிருந்தான். விழிநோக்கு மறைந்து வெறும் வண்ணக்கொப்பளிப்புகளே எஞ்சின.

நெடுநேரம் கடந்து வியர்வை குளிர விடாய் எழ அவன் சூழ்விழிப்பு கொண்டபோது எண்ணங்கள் அடங்கிவிட்டிருந்தன. நீள்மூச்சுக்கள் எழுந்துகொண்டே இருந்தன. புன்னகையுடன் “அரண்மனை வந்துவிட்டதா?” என்றான். பிருகந்நளை “ஆம், முகப்பு தெரிகிறது” என்றாள். “அங்கே அரசவரவேற்பு இருக்கும்… கவிஞர்கள் பாடலியற்றத் தொடங்கிவிட்டிருப்பார்கள்” என்றான். “ஆம், நாளைமுதல் நீங்கள் யார் என்பதை சூதர்கள் முடிவுசெய்வார்கள்” என்றாள் பிருகந்நளை.

முந்தைய கட்டுரைவாஞ்சி -இந்துவின் மன்னிப்புகோரல்
அடுத்த கட்டுரைகிராதம் செம்பதிப்பு வருகை